Wednesday, September 18, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 330

கத்தியுடன் நிற்கும் கம்சனைப் பார்த்து வசுதேவர் கூறலானார்.

தாங்கள் வீரர்களில் தலைசிறந்தவர் என்று புகழ் பெற்றவர். அப்படியிருக்க, ஒரு பெண்ணை, அதிலும் மணக்கோலத்திலிருக்கும் சொந்த சகோதரியை, மகளுக்கொப்பானவளைக் கொல்லலாமா?

மரணம் என்பது பிறவி எடுத்தோர் அனைவர்க்கும் நிச்சயமானது. இன்றோ, நாளையோ, நூறாண்டுகள்‌ கழித்தோ கூட வரலாம்.
உடலைப் பிரியும் ஜீவன் தன் வசமிழந்து வினைவழிச் சென்று வேறு உடல் பெற்றுவிடுகிறது.

நடந்து செல்லும்போது ஒரு காலை ஊன்றிய பின்பே மறு காலை பூமியிலிருந்து எடுக்கிறோம். அதுபோல் ஜீவனும் மற்றொரு உடலைப் பற்றிக்கொண்ட பின்பே வாழும் உடலை விடுகிறது.

பலதடவைகள் மனத்தால் பார்த்து, கேட்டு, உருவகப்படுத்தியதை விவரிக்க முடியாமல் வார்த்தையின்றித் தவிப்பதுபோல் முன்பிருந்த உடலின் நினைவை மொத்தமாய் இழந்து, ஆனால், வினைப்பயனையும், அனுபவ அறிவையும்‌ சுமந்துகொண்டு வேறு உடலை ஜீவன்‌அடைகிறது.

வினைப்பயனின்படி, மாயையினால் தூண்டப்பட்டு மனம் எந்த உடலின்பால் இழுக்கப்படுகிறதோ அதுவே அடுத்த பிறவியாக அமைகிறது.

காற்றினால் நீர் அசையும்போது
நீர்நிலையில் எதிரொளிக்கும் சூரியனும் அசைவதுபோல் தோன்றும்.
நீரில் தெரியும் சூரியன் அசைவதை வைத்து வானத்து சூரியனும் அசைகிறது என்று கொள்ளலாகுமா?

அதுபோல் பிறவியை நிலையென நினைத்துக்கொண்டு பாவங்கள் செய்யலாகாது.
இயல்பாகவே எளியோரிடம்‌ அன்பு காட்டும் நீங்கள் இவளைக் கொல்லலாகாது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு வசுதேவர் கூறிவிட்டு கம்சனைப் பார்த்தார்.

ம்ஹூம். அவன் சற்றும் மனம் இரங்கியதாகத் தெரியவில்லை. இறுகிப்போன கடுமையான முகத்துடன், தேவகியின் கழுத்தில் கத்தியை வைத்தபடியே நின்றிருந்தான்.

அந்த துஷ்டனைப்‌ பார்த்து, வசுதேவர் மேலும்‌ பேசத் துவங்கினார்.

நன்னடத்தை உள்ளவரே! ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம். இவளுக்கு குழந்தை பிறக்கும் என்பது என்ன நிச்சயம்?
அதுவும்‌ எட்டு குழந்தைகள் பிறக்கும் என்பதற்கு உத்தரவாதம்‌ இருக்கிறதா?

அப்படியே பிறந்தாலும் அதற்கு முன்பே கூட இயற்கையாகவே இவளோ, நானோ, அந்தக் குழந்தைகளோ, அல்லது நீங்களோ மரணிக்க வாய்ப்பு உள்ளதே‌.

அசரீரி வாக்கை நம்பி உங்கள் தங்கையை மணநாள் அன்றே கொல்லலாமா? தங்களைப் போன்றவர்க்கு அது அழகா? எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே. இது தங்களது புகழுக்குக் கேடாகாதா?
என்றார்.

அதற்கும் கம்சன் அசைந்து கொடுக்கவில்லை.
அத்தனை சாஸ்திரங்களும்‌ அறிந்த வசுதேவர் மிகவும் சிந்தித்தார். சாம, தான, பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளில், கடைசி வழியைப் பின்பற்றமுடியாது. ஏனெனில் கம்சன் அதிகாரத்தில் இருப்பவன்.

சமாதானமும், பேதமும் பேசிப் பார்த்தார். பயனில்லை. இப்போது தானம் என்ற வழியைப் பின்பற்றி வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கவனத்துடன் மீண்டும் பேசினார்.

மிகவும் அஞ்சினாலும், கோபம் வந்தபோதும், அடக்கிக்கொண்டு சிரிப்புடன் பேசத்துவங்கினார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment