Monday, September 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 329

மதுராவின் ராஜவீதிகளில் மணப்பெண்ணான தேவகியையும், மணமகனான வசுதேவரையும் அழைத்துக்கொண்டு வெகு விமரிசையான தேரோட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தான் கம்சன்.

குதிரைகளின் சத்தம், மக்களின் வாழ்த்தொலி, மங்கள வாத்யங்களின் முழக்கங்கள், அத்தனை ஆரவாரங்களையும், தாண்டி இடி முழக்கம்போல் ஒரு அசரீரி வாக்கு கேட்டது.

அடே! முட்டாளே!

என்ற அசரீரி வாக்கு அழைத்தது. அங்கிருந்த இலட்சக்கணக்கான மக்களில் அனைவர் காதுகளிலும் விழுந்தபோதும், ஒருவரேனும் அண்ணாந்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், கம்சன் நிமிர்ந்து பார்த்தான்.

சுற்றியுள்ள அனைவரும் இந்திரன், சந்திரன் என்று முகஸ்துதி செய்தாலும், தான் யாரென்பது அவரவர்க்குத் தெரியுமல்லவா?
அசரீரி அழைத்ததும், கம்சன் நிமிர்ந்து பார்த்தான்.

அடே முட்டாளே! நீ யாரை அன்புடன் அழைத்துச் செல்கிறாயோ, அவளது எட்டாவது கரு உன்னை அழிக்கப்போகிறது.

அதைக் கேட்டானோ இல்லையோ, அனல் பட்ட பாம்பைப் போல் துள்ளிக் குதித்தான்.

துஷ்டர்களின் இயல்பே மிகவும் ஆபத்தானது. பிடித்துவிட்டால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். அடுத்த கணமே ஏதாவது காரணத்திற்காகத் தூக்கிப் போட்டு மிதிக்கவும் தயங்கமாட்டார்கள்.

இவ்வளவு நேரம், தேவகியை ரதத்தில் வைத்துத் தானே பெருமையுடன் தேரோட்டிய கம்சன், அசரீரி வாக்கைக் கேட்ட அடுத்த கணத்தில் தேவகியின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவ்வளவு நேரம் எள் போட்டால் கூட தரையில் விழாமல் நிரம்பியிருந்த கூட்டம் காணாமல் போயிருந்தது. கம்சனின் ஊர் மக்களுக்குத் தெரியுமே. மந்திரிகள், வீரர்கள், ஊர் மக்கள் அனைவரும் ஓடிவிட்டனர்.

அத்தனை பெரிய ராஜவீதியில், நட்ட நடு வீதியில் தேரில் கம்சனும், தேவகியும், வசுதேவரும் மட்டும்.

பிறந்தது முதல் தேவகியைக் குழந்தைபோல் தூக்கி வளர்த்த தமையனான கம்சன், தனக்கு அவளது குழந்தையால் ஆபத்து என்றதும், தங்கையைக் கொல்லத் துணிந்தான். கத்தியை உருவிக்கொண்டு நிற்கிறான்.

காலையில்தான் திருமணமாயிருக்கிறது. மணம்‌முடித்து சில மணிநேரங்கள் கூட ஆகவில்லை. கைப்பிடித்த மனையாளுக்குத் துணையாக வசுதேவர் நிற்கிறார்‌. கம்சனின் சுபாவத்தை நன்கறிந்தவர். தடுத்தால் தானும் கொல்லப்படலாம் என்பதும் அவருக்குத் தெரியும். அப்படியும் மற்றவரைப் போல் விட்டு விட்டு ஓடாமல், கம்சனைச் சமாதனப் படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.

எனில், சாஸ்த்ரோக்தமாக, மந்திரங்கள் ஒலிக்க நடக்கும் திருமணங்களின் மஹிமையே தவிர வேறென்ன?

திருமண மந்திரங்கள் மணமகனுக்கும் மணமகளுக்குமான பற்பல வாக்குறுதிகள் கொண்டவை மட்டுமல்ல, அவை மணவாழ்க்கைக்கான மந்திரக்காப்பாகவும் விளங்குகின்றன.

மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்திராவிட்டாலும், பூரண ஒத்துழைப்புடன் மந்திரபலத்தில் குறைவின்றி நடைபெற்ற திருமணங்களால் மட்டுமே ஆயிரக்கணக்கான நம் முன்னோர்களின் வாழ்க்கை அதி சிறந்ததாக விளங்கியிருக்கிறது.

தேவகியின் கேசத்தைப் பற்றியிழுத்து, அவளது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு நிற்கும் மூர்க்கனான கம்சனிடத்து நல்வார்த்தைகள்‌ சொல்லி அமைதிப்படுத்த முயன்றார் வசுதேவர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment