Tuesday, September 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 334

அனந்தன் ஏழாவது கர்பமாக தேவகியின் கருவறையில் குடி புகுந்தார்.
கம்சனால் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்பட்டுள்ள பயத்தை உணர்ந்த பகவான் தான் அவதாரம் செய்ய முடிவெடுத்தார்.

யோகமாயையான துர்கையை அழைத்தார்.

மங்கள வடிவுள்ள தேவீ! கோபர்களும், பசுக்களும் நிறைந்த அழகிய ஆய்ப்பாடியில் வசுதேவரின் மனைவி ரோஹிணி வசிக்கிறாள்‌. வசுதேவரின் மற்ற மனைவிகளும் கம்சனுக்கு பயந்து வெவ்வேறு இடங்களில் மறைந்து வசிக்கிறார்கள்.

தேவகியின் வயிற்றில் என் அம்சமான ஆதிசேஷன் கருவாக அமர்ந்திருக்கிறார். நீ அந்தக் கருவை உன் யோக சக்தியால் எடுத்து ரோஹிணியின் வயிற்றில் மாற்றி வைத்துவிடு.

நான் தேவகியின் வயிற்றில் உடனே கருவாய் உருக்கொள்வேன். நீ சேஷனை மாற்றியபின், ஆய்ப்பாடியின் தலைவரான நந்தனின் மனைவி யசோதாவின் வயிற்றில் பிறப்பாய்.

விரும்பியதனைத்தும் வழங்கும் உன்னை மாந்தர் பல்வேறு உபசாரங்களுடன் வழிபடுவர். பூவுலகில் என் சகோதரியாகப் பிறக்கப்போகும் உனக்கு துர்கை, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, க்ருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, ஈசானி, சாரதா, அம்பிகை என்னும் பெயர்களில் கோவில்கள் ஏற்படும்.

உன்னால் கர்பத்திலிருந்து மாற்றப்படுவதால், ஸங்கர்ஷணன் என்றும், எல்லோரையும்‌ மகிழ்விப்பதால் ராமன் என்றும், வலிமை மிக்கவராதலால் பலன் என்றும் சேஷன் அழைக்கப்படுவார்.

பகவான் கூறியதைக் கேட்ட மாயை, 'அப்படியே செய்கிறேன்' என்று கூறி, அவரை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டாள்.

பூமிக்கு வந்து, ஏழு மாதங்களாய் வளர்ந்திருந்த தேவகியின் கருவை ஒரே கணத்தில் மாற்றி ரோஹிணியின் வயிற்றில் வைத்தாள். தானும் சென்று யசோதாவின் வயிற்றில் அமர்ந்துகொண்டாள்.

உறங்கி எழுந்து பார்த்தால், திடீரென்று வயிற்றில் ஏழு மாதக்கரு. எப்படி இருந்திருக்கும் ரோஹிணிக்கு?

கருவில் குடியிருந்தது பகவானின் அம்சமான சேஷன் ஆனதால், அவளுக்குப் பல தெய்வீக சொப்பனங்கள் ஏற்பட்டன. புரியாவிட்டாலும், ஏதோ தெய்வ சங்கல்பம் என்று மன அமைதி கொண்டாள். அவளைப் பற்றிய தகவல்கள் எதுவும் கசியாமல் நந்தகோபர் ஜாக்கிரதையாகப் பார்த்து க் கொண்டார்.

அங்கே தேவகியின் நிலை?

இதுநாள் வரை குழந்தை பிறந்துவிடும். அதைக் கண்ணாலாவது பார்க்கலாம். இந்தக் குழந்தை கம்சன் மீது தான் கொண்ட பயத்தால்  ‌கருவிலேயே கரைந்துவிட்டதோ என்றெண்ணி அழுதழுது தானும் கரைந்தாள்.

தேவகியிடம் இறையின் அவதாரம் ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களும் கரு கலைந்ததென்றெண்ணி மிகவும் வருந்திப் புலம்பினர்.

அந்நேரத்தில் அனைவர்க்கும் ஆறுதல் வருமாப்போலே ஸாக்ஷாத் பகவான் சிறு தீபம்போல் வசுதேவரின் மனத்தில் நுழைந்து, தேவகியின் கருவில் புகுந்தார்.

பகவானைக் கருவில் கொண்ட தேவகி அதிகாலையில் சூரியனைக் கொண்ட கீழ்திசைபோல் பிரகாசித்தாள்.

அண்டம் தாங்கும் இறைவனைக் கருவில் தாங்கிய தேவகி கம்சனின் மாளிகையில் சிறைப்பட்டு குண்டத்தில் அடைபட்ட தீம்பிழம்பாய், துஷ்டனிடம் அடைபட்ட வேதவித்யையாய் ஒளி மங்கி பிரகாசித்தாள்.

அவளைக் கண்டதுமே கம்சனுக்கு பயம் ஏற்பட்டது. என்னதான் அழுக்கு உடைகளுடன், சிறையிலிருந்தாலும், தேவகியின் ஒளியும், அழகும் முன்போல் இல்லை. அதைக் கண்டு பலவாறு யோசித்தான்.

இவளது கருவில் இறைவன் இருப்பானோ, இப்போது இவளைக் கொன்றால் பழி வருமோ, கர்பிணியைக் கொல்வது என் ஆயுளை உடனேயே அழிக்குமே.

இவ்வாறு யோசித்து அவளைக் காணவும் பயந்துகொண்டு நடைபிணமாய் அரண்மனைக்குள் அடைந்து கிடந்தான். எதுவாயினும் குழந்தை பிறந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றினாலும், எப்போதும் ஸ்ரீஹரியையே நினைக்கலானான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment