Thursday, June 28, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 25 மழை கண்ட பாலை


அரசவைக்குத் திரும்பிய தர்மபுத்ரர் காந்தாரியையும் த்ருதராஷ்ட்ரனையும் ஒருவாறு தேற்றினார்.
பீஷ்மராலும் கண்ணனாலும் சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களையும் கேட்டு, ஆட்சிப்பொறுப்பை ஏற்று தர்மத்தோடு அரசாட்சி செய்யலானார்.
அவரது ஆட்சியில் நன்றாக மழை பொழிந்தது. பூமி விரும்பியவற்றையெல்லாம் கொடுத்தது. பசுக்கள் ஏராளமான பாலைப் பொழிந்தன. ஒவ்வொரு பருவகாலத்திலும், அவற்றிற்கேற்ற விளைச்சலும், ஔஷதிகளும் நன்கு பலன் கொடுத்தன.
தர்மபுத்ரரின் ஆட்சியில் ஆதி தைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிகமான மனக்லேசங்கள், வியாதிகள், பருவகாலத் துயரங்கள், இயற்கையினால் ஏற்படக்கூடிய இடர்கள் ஆகியவை ஒருபொழுதும் ஏற்படவில்லை. அனைவரும் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர் .
சில மாதங்கள் கழித்து, கண்ணன் துவாரகைக்குக் கிளம்பினான்.
எல்லோரும் அவனது பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்தனர்.
அஸ்தினாபுரத்து மக்கள் நாடெங்கிலும் சாலையின் இருமருங்கிலும் நின்று பிரிவுத்துயரை அடக்கிக்கொண்டு வழியனுப்பினர். பெண்கள் உப்பரிகையில் நின்று கொண்டு புஷ்பங்களைத் தூவினர்.
யுதிஷ்டிரர் கண்ணனின் மேலுள்ள பிரியத்தால், கண்ணன் மறுத்தபோதிலும் அவனது பாதுகாப்புக்கென்று ஒரு சேனையை உடன் அனுப்பினார்.
காற்றாய்ப் பறந்த ரதம் துவாரகை நகர எல்லையை அடைந்தது. நகரின் வாயிலை அடைந்ததும், யுதிஷ்டிரர் அனுப்பிய சேனையைத் திருப்பி அனுப்பிவிட்டு,
கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினான்.
அவ்வளவுதான்.
கண்ணனின் சங்க நாதத்தை அறியாதவர்களா துவாரகை மக்கள்?
பல காலமாக கண்ணனைக் காணாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.
சபரி தினமும் ராமனுக்காக எதிர்பார்த்து, எத்தனையோ வருடங்களாக தினமும் கோலமிட்டு, புஷ்பங்களும் கனிகளும் பறித்துவைத்துக்கொண்டு அதுவரை தான் பார்த்தேயிராத ராமனுக்காகக் காத்திருந்தாள்.
துவாரகை மக்களோ கண்ணனின் அன்பில் திளைத்தவர்களாயிற்றே.
எதிர்பார்த்து பார்த்து, எப்போது கண்ணன் வந்தாலும் வரவேற்பதற்காக ஆரத்தி, புஷ்பங்கள், மங்கள திரவியங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருந்தனர்.
சங்கநாதம் கேட்டதும், அனைவரும் வீதிக்குப் பாய்ந்தோடி வந்தனர்.
துதிபாடிகளும், நர்த்தகிகளும், கண்ணைன் நண்பர்களும், மந்திரிகளும் விரைந்து வந்து எதிர்கொண்டழைத்தனர்.
கண்ணன் மெதுவாக ரதத்தைச் செலுத்தச் சொல்லி, மக்கள் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்ணுக்குக் கண் நோக்கி, கையசைத்துக்கொண்டு நகரத்தினுள் ப்ரவேசித்தான்.
பெண்கள் உப்பரிகையிலிருந்து புஷ்ப வர்ஷம் செய்தனர். வயதான பெண்கள் வந்து ஆரத்தி எடுத்தனர்.
மங்கலத் தோரணங்களும், தீபங்களும் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் ஒளிவீசின.
மெதுவாக அரண்மனையை அடைந்தான் கண்ணன். பலராமனும், தந்தையும் அணைத்து வரவேற்றனர். வசுதேவருக்கு தேவகியையும் சேர்த்து ஏழு மனைவிகள். அத்தனை அன்னைகளையும் வணங்கினான் கண்ணன். அவர்கள் ஒவ்வொருவரும், கண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருக்கினர்.
பின்னர் மனைவிகள் இருக்கும் பவனத்தை அடைந்தான் கண்ணன்.
கண்ணன் அஸ்தினாபுரம் சென்றதிலிருந்து அவனது மனைவியர் பலவிதமான விரதங்களை மேற்கொண்டிருந்தனர்.
ருக்மிணி உள்பட அனைவரும் இன்று தான் கண்ணனை முதன்முதலில் பார்ப்பவர் போல் பரவசமடைந்து விரதங்களை விட்டு எழுந்தோடி வந்தனர்.
ஆத்மாராமனான கண்ணன் எவ்வித அழகிலும் மயங்குவதில்லை. மன்மதனும் அவன் மனத்தில் எந்த விகாரத்தையும் ஏற்படுத்த முடியாமல் தோற்றுப்போனான். ஆனால், அவரவர் மனோபாவத்திற்கேற்ப, கண்ணன் தன்னைத்தான் விரும்புகிறான், தன் அழகில் மயங்கிக் கிடக்கிறான் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டார்கள். அவர்களது மனோபாவத்திற்கேற்ப கண்ணன் மனைவிகளை சந்தோஷப்படுத்தினான்.
ஶௌனக மஹரிஷி கேட்டார்.

உத்தரையின் கர்பத்திலிருந்த குழந்தை யார்? அவருக்கு என்னவாயிற்று?
ஸூதர் பரீக்ஷித்தின் கதையைக் கூடலானார்.
கர்பத்திலிருந்த குழந்தை கட்டைவிரல் அளவிற்கு ஒரு உருவம் தன்னைச் சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டது. மிக அழகாக இருந்த அந்த உருவம் கையிலிருந்த கதையைச் சுழற்றிக்கொண்டே குழந்தையைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தது.
குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவ்வுருவம் மறைந்துவிட்டது.
சில நாள்களில் பூமியில் பிறந்த அக்குழந்தைக்கு, யுதிஷ்டிரர் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டவன் என்று பொருள்படும்படி யாக, விஷ்ணுராதன் என்று பெயரிட்டார்.
பிறந்த குழந்தையோ, தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொருவரையும் கர்பத்தில் தான் பார்த்தவர் இவரா என்று ஆராய்ந்து ஆராய்ந்து உற்று உற்றுப் பார்த்து அழுதது. அதனாலேயே பரீக்ஷித் என்று பெயர் பெற்றது.
இப்பெயருக்கு இன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவற்றை அந்தந்த தருணங்களில் காண்போம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment