Wednesday, June 6, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 3 ஸர்வபூத மனோஹரம்

புத்ரனான சுகரைத் துரத்திக்கொண்டு வியாஸர் சென்றபோதும், அவரால் தனயனைப் பிடிக்க முடியவில்லை.
யக்ஞப் ப்ரசாதமாக ப்ரும்மஸ்வரூபமாய் அருமையான புத்ரன் கிடைத்தும் அவன் வீடு தங்காமல் புறப்பட்டதை நினைத்து, வருத்தத்துடன் ஆசிரமம் திரும்பினார் வியாஸ பகவான்.
பாடசாலைகளில் அஷ்டமி, அமாவாசை போன்ற பாடம் இல்லாத நாட்களில், ஹோமத்திற்கும் அனுஷ்டானங்களுக்கும் வேண்டிய தர்பை, ஸமித் (அரச மரக் குச்சி)போன்றவற்றை சேகரிக்க மாணவர்கள் காட்டுக்குள் செல்வார்கள்.
ஒரு சமயம் அவ்வாறு செல்லும் மாணவர்கள் குருவான வியாஸரிடம் வந்து
ஸ்வாமி, காட்டினுள் துஷ்ட மிருகங்கள் அதிகமாக ஸஞ்சரிக்கின்றன. எங்களுக்கு பயமாக இருக்கிறது. அவற்றிடமிருந்து காத்துக்கொள்ள ஏதாவது உபாயம் சொல்லுங்கள்
எனக் கேட்டனர்.
வியாஸர்
ஹூம் பட் என்று கேட்டவுடன் மிருகங்கள் சிதறி ஓடும்படியாக ஏதாவது மந்திரோபதேசம் செய்யக்கூடாதோ? ஆனால், அவரோ
சற்று யோசித்துவிட்டு,
பர்ஹாபீடம் நடவர வபு: கர்ணயோ: கர்ணிகாரம்
பிப்ரத் வாஸ: கனக கபிசம் வைஜயந்தீஞ்ச மாலாம் |
ரந்த்ரான் வேணோர் அதர சுதயா பூரயன் கோபவ்ருந்தை:
வ்ருந்தாரண்யம் ஸ்வபத ரமணம் ப்ராவிசத் கீத கீர்த்தி:||
என்ற ஸ்லோகத்தை உபதேசம் செய்து
இதை ஆவ்ருத்தி செய்துகொண்டே செல்லுங்கள். எந்த ஜீவராசியும் உங்களை ஒன்றும் செய்யாது
என்று சொன்னார்.
அப்படியென்ன ஸ்லோகம் அது?
சகல ஆபத்து களிலிருந்தும் காக்கும் எவ்வளவோ மந்திரங்கள் இருக்கின்றனவே. பலவற்றை செய்ததே வியாசர்தானே..
ஸ்ரீ மத் பாகவதத்திலேயே நாராயண கவசம் என்ற அற்புதமான ஸ்லோகத் தொகுப்பு எதிரி களிடமிருந்து பாதுகாக்குமே.
ஸ்ரீ மத் பாகவத்திலேயே சுதர்சன ஸ்துதி இருக்கிறது.
அதையெல்லாம் விட்டுவிட்டு
கண்ணன் வேணு கானம் செய்யக் கிளம்பிய கோலத்தை வர்ணிக்கும் ஸ்லோகத்தை இப்போது காக்கும் கவசமாக உபதேசம் செய்திருக்கிறாரே
என்று தோன்றலாம்.
இந்த ஸ்லோகம் ஸ்ரீ மத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் 21ம் அத்யாயத்தில் சொல்லப்படுகிறது. ஐந்து முக்கியமான கீதங்களில் கண்ணன் குழலூதும் அழகை வர்ணிக்கும் வேணுகீதத்தின் துவக்கத்தில் வருகிறது.
அழகான பெரிய மயில்பீலியை தலையில் வைத்துக்கொண்டு, அன்னை போட்டுவிட்ட தங்க ஆபரணங்களையெல்லாம் மரப்பொந்தில் கழற்றிவைத்துவிட்டு, காதுகளில் கர்ணிகாரப் புஷ்பத்தையும், கழுத்தில் வனமாலையையும் அணிந்துகொண்டு அத்தனை கோபிகளையும் பொறாமை கொள்ளவைக்கும் குழலை பவள வாயில் வைத்துக்கொண்டு, அத்தனை ஜட மற்றும் ஜீவராசிகளின் ஹ்ருதயங்களையும் கொள்ளை கொள்ளும்படி மிக மிக ஒயிலான நடையுடன் ப்ருந்தாவனத்திற்குள் கண்ணன் ப்ரவேசிக்கும் அழகைச் சொல்லும் ஸ்லோகம்.
குரு உபதேசம் செய்த ஸ்லோகத்தை உரு ஏற்றிக்கொண்டு அதையே ஆவ்ருத்தி செய்துகொண்டு சீடர்கள் காட்டில் ஸமித் முதலியவைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள்..
என்ன ஆச்சர்யம்!
மாணாக்கர்கள் சொல்லும் ஸ்லோகத்தைக் கேட்டு சிங்கம், புலி,பாம்பு போன்றவையெல்லாம்கூட ஸ்வபாவத்தை மறந்து அன்போடு வாலைக் குழைத்துக்கொண்டும் நக்கிக்கொடுத்துக்கொண்டும் சென்றன.
அன்பே உருவான நமது ஸ்வாமியைப் பற்றிய வர்ணனையே போதும். உலகில் அன்பு பெருகும்.
பர்ஹாபீடம் நடவர வபு: ..
பர்ஹாபீடம் நடவரவபு:..
அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த ஸ்லோகம் காற்றில் சுற்றிச் சுற்றி நமது ப்ரும்மத்தின் காதுகளுள் நுழைந்தது.
பாமரர்களையும் மிருகங்களையும் மட்டுமல்ல, ப்ரும்மஞானிகளையும் அசைத்துப்போடும் நமது கண்ணனின் உருவமும், பெயரும்.
அவதூதரான ஸதாசிவ ப்ரும்மேந்திராளும்
மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே -
மானஸ ஸஞ்சரரே - ப்ரும்மனி
தலையில் மயில்பீலி வைத்துக் கொண்டிருக்கும் ப்ரும்மத்தில் ஈடுபடுவாய் மனமே என்று பாடுகிறார்.
தேனிருக்கும் மலரை வண்டு தேடி வருவதுபோல,
நன்கு பழுத்த பழத்தைத் தேடி கிளி வருவதுபோல,
ஸ்லோகத்தைக் கேட்டதும் சுகமுனியின் கால்கள் தாமாகவே சொல்பவர்களைத் தேடி நடந்தது..
மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

2 comments:

  1. ராதே ராதே.

    ஸர்வாலங்கார பூஷிதனாய் பகவானைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

    ReplyDelete