Monday, June 25, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் -22 அத்தை செய்த துதி

ப்ரும்மாஸ்திரத்தால் வந்த ஆபத்தை விலக்கி கர்பத்தைக் காத்தது கண்ணன் ஏவிய ஸுதர்சனம் என்பதை குந்தி உடனே புரிந்துகொண்டாள்.
வம்சத்தின் மூத்தவள். பாண்டுவுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அன்றிலிருந்து காந்தாரியின் பொறாமையைச் சகித்துக்கிண்டு, தன் பிள்ளைகளைக் கொல்லத்துணிந்த கௌரவர்களைச் சகித்துக்கொண்டு, பொறுமையின் உருவமாய்த் திகழ்பவள்.பீஷ்மர், விதுரர் போன்ற பெரியவர்கள் இருந்தும் தன் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டவள். சிறு வயது முதல்,
ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் கண்ணன் எப்படி தங்கள் வாரிசுகளைக் காத்தான் என்பதை அருகிலிருந்து பார்த்தவள்.
உத்தரையின் வயிற்றிலிருக்கும் சிசுதான் இப்போது ஒரே வாரிசு.மற்ற அத்தனை குழந்தைகளும் இறந்துவிட்டன. அதைக் கண்ணன் காப்பாற்றிக் கொடுத்ததும், அவனது கருணையை நினைத்து குந்தியின் கண்களில் நீர் திரண்டது.
குந்தி வசுதேவரின் தங்கை ஆவாள். அதனால் அவள் கண்ணனுக்கு அத்தையாகிறாள்.
ரதத்திலேறி கண்ணன் துவாரகைக்குப் புறப்படும் சமயத்தில் இவ்வளவு அமர்க்களம். கண்ணன் ரதத்தைவிட்டு இறங்கவில்லை. குந்தி மெதுவாக ரத்தத்தின் அருகே சென்று கண்ணனைப் பார்த்துக் கைகளைக் கூப்பினாள்.
நீ ஸர்வேஸ்வரன், முதல் காரண புருஷன், பார்வையற்றவனுக்கு விஷயங்கள் தெரியாததைப்போல்,
மாயையினால் கண்கள் கட்டப்பட்டிருப்பவர்களின் கண்களுக்கு உமது ஸ்வரூபம் தெரிவதில்லை.
உம்மை நமஸ்கரிக்கிறேன் என்றாள்.
இப்படிப்பட்ட ஸ்துதிகளைக் கேட்கவா கண்ணன் அவதாரம் செய்தான்?
கலகலவென்று சிரித்தான். மாயையைத் துணைக்கு அழைத்தான்.
என்னாச்சு அத்தே உனக்கு?
ஏன் இப்படி சொல்ற?
நீ பெரியவ . நீ போய் எனக்கு நமஸ்காரம்னு சொல்ற?
அவனைப் பரம்பொருளே என்றழைத்து தூரத்தில் வைப்பதை அவன் விரும்புவதே இல்லை. சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே என்ற ஆண்டாளின் கூற்றுக்கு இப்பெயர்களெல்லாம் சிறுபெயர்களாயிற்று என்று பெரியவாச்சான்பிள்ளை அவர்கள் வியாக்யானம் செய்கிறார்.
குந்தி புரிந்துகொண்டாள்.
உடனே,
க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச|
நந்தகோப குமாராய கோவிந்தாய் நமோ நம: ||
என்று அடுத்த வாக்கியம் சொன்னாள்.
கண்ணன் மகிழ்ந்துபோனான். கண்ணா, வசுதேவன் மகனே, நந்தகுமாரா, கோவிந்தா என்பவை அவன் விரும்பி ஏற்கும் விளிப்பெயர்கள்.
இந்த ஸ்லோகத்தை அறியாதவர்களே இல்லை எனலாம்.
கண்ணனின் தாய் தேவகி, தந்தை வசுதேவர், பின்னர் வளர்ப்புத்தந்தை நந்தன் ஒவ்வொருவராய் வரிசையில் நினைக்கிறாள். எனில் வளர்ப்புத்தாயான யசோதையை நினைக்கவில்லையா என்றால், அவளுக்குத் தனி ஏற்றம். பின்னால் ஒரு ஸ்லோகம் முழுவதும் யசோதையை ஸ்மரிக்கிறாள்.
என்ன விஷயம் அத்தே சொல்லு..
உன் அவயவங்கள் ஒவ்வொறுமே தாமரையின் வடிவழகை ஒத்தவை கண்ணா.
பதினான்கு வருடங்கள் சிறையில் வாடிய பின்னரே உன் தாயான தேவகியை விடுவித்தாய். ஆனால், உன்னைப் பெற்றவளை விடவும் அதிகமாக என்மீது வாஞ்சை வைத்து ஒவ்வொரு ஆபத்து வரும்போதும் உடனே ஓடி வந்து காத்தாய்.
பீமனுக்கு விஷம் வைத்தார்கள். நீ காப்பாற்றினாய்.
அரக்கு மாளிகையோடு கொளுத்தப்பட்டபோதும் காத்தாய்
ஹிடும்பன் முதலிய ராக்ஷஸர்களிடமிருந்தும், சூதாட்ட சபையில் த்ரௌபதியையும், வனவாஸத்தில் ஒவ்வொருநாளும் ஏற்பட்ட கண்டங்களிலிருந்தும், காப்பாற்றினாய். ஒவ்வொரு சண்டையிலும், பீஷ்மர் போன்ற மஹாரதர்களின் அஸ்திரங்களிலிருந்தும் இப்போது ப்ரும்மாஸ்திரத்திலிருந்தும் நீயே எங்களைக் காத்தாய். உலகனைத்திற்கும் குருவாய் விளங்குபவன் நீ.
நீ ஒடிவந்து தர்சனம் அளித்துக் காக்கும்படியான விபத்துக்களும் கஷ்டங்களும் எங்களுக்கு அடிக்கடி வரட்டும். ஒவ்வொரு கஷ்டமும் உன் தரிசனத்தாலேயே விலகுகிறது.
நீ தயிர்ச்சட்டிகளை உடைத்தபோது, யசோதை உன்னைக் கட்டுவதற்கு கயிற்றைக் கொண்டுவந்தாள். அப்போது முகத்தைத் தாழ்த்திக்கொண்டு, பயமே பயப்படும் ஸ்வரூபமாகிய நீ பயந்தவன் போல் நின்றாயே. அந்த உன் ஸ்வரூபம் என்னை மயக்குகிறது. அதுவே என் தியானத்தில் எப்போதும் இருக்கட்டும்.
பிறப்பே இல்லாத நீ தேவர்களுக்கும் எங்களுக்கும் க்ஷேமம் செய்வதற்காக ப்ரும்மாவின் வேண்டுகோளுக்கிரங்கி அவதரித்திருக்கிறாய்.
யார் உன் சரித்திரத்தைக் கேட்கிறார்களோ, பாடுகிறார்களோ திரும்ப திரும்ப சொல்கிறார்களோ, அடிக்கடி நினைக்கிறார்களோ அவர்கள் உன் திருவடித் தாமரை யை வெகு சீக்கிரம் பார்க்கிறார்கள்.
ஹே கிருஷ்ணா! அர்ஜுனனின் தோழனே! வ்ருஷ்ணிகுலத்தலைவனே!
யோகீஷ்வரா! உனக்கு நமஸ்காரம்
என்று இன்னு ம் பலவாறு ஸ்துதி செய்து கண்ணனை வணங்கினாள்.
குந்தி ஸ்துதி எனப்படும் இந்த ஸ்துதி பஞ்ச ஸ்துதிகளுள் ஒன்றாகும்.
இதைக்கேட்டு கண்ணன் அன்போடு ஒரு புன்முறுவல் செய்துவிட்டு
போய்ட்டு வரேன் அத்தை என்றான்.
அப்போது தர்மபுத்திரர் அருகே வந்து,
கண்ணா, இப்போதான் ஒரு ஆபத்து விலகியிருக்கு. மனம் ரொம்ப சங்கடமாய் இருக்கு. நீயும் இப்பவே கிளம்பணுமா? நீ இன்னும் கொஞ்சநாள் எங்களோடு இருந்தா எங்களுக்கு ஆறுதலா இருக்கும் என்று சொன்னார்.
அங்கிருக்குந்த அனைவர் முகத்தையும் பார்த்தான் கண்ணன். சற்று நேரம் முன்பு ஏற்பட்ட ஆபத்தின் அதிர்ச்சி யிலிருந்து ஒருவரும் மீளவில்லை.
சரி, நான் இப்ப போகல.
என்று சொல்லி ரதத்திலிருந்து குதித்து இறங்கி அர்ஜுனனின் தோளின்மீது கையைப்போட்டுக்கொண்டு உள்ளே சென்றான்.
தாமரைக்கண்ணன் ஊருக்குக் கிளம்பவில்லை என்றதும் அனைவரின் முகங்களும் சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தன.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment