Wednesday, February 17, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 630

கலியுக வர்ணனை

ஸ்ரீசுகர் கூறலானார்..

கலியுகம் பிறந்ததும் நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகரிக்கும். மாந்தர்க்கு  அறம், உண்மை, பொறுமை, தூய்மை, கருணை, ஆயுள், பலம், நினைவாற்றல் அனைத்தும் குறையும்.

பணம் மட்டுமே‌ கடவுளாகும். நற்குலப் பிறப்பு, நன்னடத்தை, நற்குணம் ஆகியவை பணத்தை வைத்து முடிவு செய்யப்படும். பணமே ஒழுக்கத்தின் காரணியாகக் கருதப்படும். நீதி நியாயம் அனைத்தும் பணமே‌. திருமணங்கள் ஆண் பெண் உடற்கவர்ச்சியை வைத்தும், பணத்தை வைத்தும் முடிவு செய்யப்படும். நன்கு  ஏமாற்றத் தெரிந்தவனே வல்லவனாவான்.

ஒருவரின் உயர்வுக்குக் காரணமாகப் பணமே விளங்கும். புலன் இன்பங்களும் புணர்ச்சித் திறங்களுமே ப்ரதானமாகப் பேசப்படும். அந்தணன் பெயரளவில் முப்புரிநூல் அணிந்திருப்பான். வேறு எந்த ஆசாரமும் அனுஷ்டானமும் இருக்காது. ஆடை, தண்டம், கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டே  ப்ரும்மச்சாரி,  க்ருஹஸ்தன், துறவி என்று பிரித்தறிய இயலும். லஞ்சத்தில் ஊக்கம், பணம் செலவழிப்பதில் ஊதாரித்தனம், இடம் காலம் மனிதர் ஆகியவரைப் பொறுத்து பொய்களை மாற்றி மாற்றிப் பேசும் திறன், ஆகியவையே அறிஞனின் அடையாளங்களாகும்.

ஏழையாக இருப்பவன் சான்றோனாயினும் குற்றவாளியாக மதிக்கப்படுவான். திருமணங்களில் சடங்குகளுக்கு மதிப்பிருக்காது. ஆடம்பரமும், பணமும் போதுமானதாக இருக்கும். 

நன்றாக அலங்கரித்துக் கொண்டால் போதும். ஸ்நானம் நன்னீராட்டம் ஆகியவை அவசியமில்லை. 

குளம் குட்டைகள் புண்ணிய தீர்த்தங்களாகிவிடும். நதிகளையோ பெற்றோரையோ துளியும் மதியார்.

அழகு செய்து கொள்வதும், கூந்தலைப் பராமரிப்பதும் முக்கிய கடைமைகளாகிவிடும். மனவுறுதியோடு ஒரு பொய்யைப் பலமுறை கூறி மெய்யாக்குவர். குடும்பத்தைக் காப்பதே திறமை. புகழுக்காக தர்மம் பின்பற்றப்படும்.

அரசனுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. பலமுள்ளவன் எவனோ அவன் தீயவனாயினும்  அரசனாவான்.

அவனுக்கு பயந்து மக்கள் காடுகளுக்குள் ஒளிவார்கள். இலை, தழை, காய் கிழங்குகளைத் தின்று வயிறு வளர்ப்பர்.

வறட்சி பெருகும். வறுமை அதிகமாகும். வரிச்சுமை கழுத்தை நெறிக்கும். கடுங்குளிர், கடும்பனி, புயல், கடுங்கோடை, பெருவெள்ளம் ஆகியவற்றாலும் பரஸ்பரச் சண்டைகளாலும் மக்கள் அழிவர்.

நோய்கள் தொடரும். மனிதனின் அதிக பட்ச ஆயுள் இருபதிலிருந்து முப்பது வருடங்களே ஆகும். மாந்தரின் உடல் வளர்ச்சியின்றி மிகவும் சிறிதாக தேய்ந்து நோய் மிகும்.

நாத்திகமே முக்கிய நெறியாகும். மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் கள்வரே.

துறவிகளும் வானப்ரஸ்தர்களும் கூட நெறி வழுவி மனைவி மக்கள் என்று சேர்த்துக் கொள்வர்.

உறவுகள் மனைவி வீட்டார் மட்டுமே என்றாகும். தானியங்கள் சிறுத்துப் போகும். கலியுகம் முற்றுங்கால் இவர்களின் நடத்தை மிகவும் பொறுக்க முடியாததாகிப் போகும்.

அவ்வமயம் பகவான் திருவவதாரம் செய்வார்.

காரணபூதரான அவர் சாதுக்களையும் அறநெறியையும் காப்பார். 

சம்பளம் என்ற கிராமத்தில் விஷ்ணுயசஸ் என்ற ஒரு உத்தம சீலர்ருக்கு மகனாக அவதரிப்பார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment