Tuesday, February 9, 2021

ஸ்ரீ மத் பாகவத பழம் - 628

பன்னிரண்டாவது ஸ்கந்தம்..

பரீக்ஷித் கேட்டான்.

கண்ணன் இந்தப் பூவுலகை விட்டுக் கிளம்பிய பின்பு இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் யாவர்? இனி வரப்போகும் அரசர்கள் யார் யார்? எந்த வம்சத்தினர்? என்றான்.

ஸ்ரீசுகர் பதிலிறுக்கத் துவங்கினார். இதற்கு முன்னால் (ஒன்பதாவது ஸ்கந்தத்தில்) ஜராஸந்தனின் தந்தையான ப்ருஹத்ரதன் வம்சத்தைச் சேர்ந்த ரிபுஞ்ஜெயன் கடைசி மன்னன் என்று கூறினேன். அவனுடைய மந்திரி சுனகன் என்பவன். அவன் மன்னனைக் கொன்றுவிட்டு தன் மகனான ப்ரத்யோதனை அரசனாக்குவான். அவனது வம்சம் பாலகன், விசாகயூபன், ராஜகன், நந்திவர்தனன் ஆகியோர் வரிசையாக அரசாள்வர். இவர்களின் மொத்த ஆட்சிக் காலம் 138 வருடங்கள்.

அதன் பின் சிசுநாகன் என்பவன் அரசாள்வான். அவன் வழி வருபவர்கள் காகவர்ணன், க்ஷேமதர்மன், க்ஷேத்ரக்ஞன், விதிரஸன், அஜாதசத்ரு, தர்பகன், அஜயன், நந்திவர்தன், மஹாநந்தி ஆகியோர். சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் முன்னூற்றறுபது வருடங்கள் ஆட்சி செய்வர். மஹாநந்தியின் வேறொரு மனைவிக்கு நந்தன் என்பவன் பிறப்பான். அவன் பேராற்றல் படைத்தவன். இவன் க்ஷத்ரியர்களின் அழிவிற்குக் காரணமாவான். இவன் காலம் துவங்கி வரப்போகும் மன்னர்கள் எவரும் அறநெறியைப் பின்பற்றப்போவதில்லை. 

நந்தன் மஹாபத்மன் என்றழைக்கப்படுவான். அவன் க்ஷத்ரிய குலத்தை அழிப்பதால் இரண்டாம் பரசுராமர் என்று கொண்டாடப்படுவான். இந்நிலவுலகம் முழுவதையும் ஒரே குடைக்குக் கீழ் ஆட்சி புரியப்போகிறான். 

அவனுக்கு எட்டு புதல்வர்கள் பிறப்பார்கள். அவர்கள் நூறாண்டுகள் ஆளப்போகிறார்கள். கௌடில்யர், வாத்ஸாயனர், சாணக்யர் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு அந்தணர் நந்தனையும் அவன் புதல்வர்களையும் அழிக்கப்போகிறார். நந்த வம்சம் அழிந்ததும் கலியுகத்தில் மௌரியவம்சம் கோலோச்சும். சாணக்யர் என்ற அந்தணரே சந்திரகுப்தன் என்பவனை மன்னனாக்கப் போகிறார்.

அவனது மகன் அசோகவர்தனன். அவனது மகன் ஸுயசன். அவனது வம்சம், சங்கதன், சாலிசூகன், ஸோமசர்மா, சததன்வா, ப்ருஹத்ரதன் ஆகியோர். இவர்கள் அனைவரும் நூற்று‌முப்பத்தேழு வருடங்கள்‌ அரசாள்வர்.

ப்ருஹத்ரதனின் சேனாதிபதி சுங்கன். அவன் மன்னனைக் கொன்றுவிட்டுத் தானே மன்னனாவான். அவனுக்குப் பின்னால் அரசாளப்போகிறவர்கள் அக்னிமித்ரன், ஸுஜ்யேஷ்டன், ஆகியோர். 

அவனது வம்சம் வஸுமித்ரன், பத்ரகன், புளிந்தன், கோஷன், வஜ்ரமித்ரன் என்று நீள்கிறது. வஜ்ரமித்ரனின் மகன் பாகவதன். அவனது மகன் தேவபூதி. இவர்கள் அனைவரும் நூறு வருடங்களுக்கு மேல் ஆள்வார்கள். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment