Thursday, February 18, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 631

கல்கி எனும் பெயர் பெறப்போகும் பகவான் எண்வகை சித்திகளும், நற்குணங்களும் நிறைந்தவர். மிகுந்த தேஜஸ்வியாக விளங்குவார். அனைத்துயிர்க்கும் காப்பாளர் அவரே. 

அவரது குதிரையின் பெயர் தேவதத்தம் என்பதாம். அது மிகவேகமாகச் செல்லக்கூடியது‌. அதன் மீதேறி மின்னல் வேகத்தில் தீயோர் பலரையும் வெட்டிச் சாய்த்து நில உலகைச் சமன் செய்யப்போகிறார். குதிரை மேலேறிக்கொண்டு புவியெங்கும் சுற்றுவார். கோடிக்கணக்கான திருடர்களை மாய்ப்பார். தீயவர் அனைவரும் அழிந்த பிறகு மக்கள் மனம் தூய்மையாகும். பகவானின் திருமேனியிலிருந்து எழும் சுகந்தத்தைச் சுமந்து வரும் காற்று மக்கள் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கும்.

ஸத்வ குணம் பெருகத் துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக படைப்பு வலிமையும் செழுமையுமாக மாறும். 

பகவான் கல்கியின் திருவவதாரம் துவங்கும் காலமே கலியுகம் முடியும் காலம். அதன் பின் க்ருத யுகம் துவங்கும். இயல்பாகவே மக்கள் ஸத்வகுணமுள்ளவர்களாகப் பிறப்பார்கள்.

சந்திரன், சூரியன், வியாழன் ஆகிய மூன்று கிரஹங்களும் பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில், கடக ராசியில் கூடுவார்கள். அன்றைய தினம் க்ருத யுகம் துவங்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு‌முறை கூடுவராயினும் கடக ராசியில் நுழைவது பற்றியே இங்கு கூறப்படுகிறது. 

ஹே பரிக்ஷித்!
இதுவரை உனக்கு சூரிய சந்திர வம்சத்து மன்னர்கள் அனைவர் பற்றியும்‌ கூறினேன்.

நீ பிறந்தது முதல் நந்தனின் பட்டாபிஷேக காலம் வரை ஆயிரத்து நூற்றுப் பதினைந்து வருடங்களாகும்.

மரீசி, அருந்ததியுடன் வசிஷ்டர், ஆங்கீரஸ், அத்ரி, புலஸ்த்யர், புலஹர், க்ரது ஆகியோர் தோன்றுவர். வானில் ப்ரகாசிப்பர். ஆச்வினி நக்ஷத்திரம் தோன்றி அது மட்டும் ப்ரகாசமாகத் தெரியும். அதைச் சுற்றி ஸப்த ரிஷிக் கூட்டம் நூறு வருடங்கள் இருக்கும். நீ பிறந்தபோது ஸப்தரிஷிக் கூட்டம் மக நட்சத்திரத்தில் இருந்தது. 

கண்ணன் இப்புவியிலிருந்து கிளம்பியதுமே பூமியைப் பாவம் ஆக்கிரமித்துவிட்டது‌. கலியில் அனைவர் மனமும் பாவத்தை நோக்கியே பயணிக்கும். ஸப்தரிஷிக் கூட்டம் மகத்தைக் கடந்து பூராடத்தில்‌ நுழையும்போது நந்த வம்சம் ஆட்சி செய்யும். அப்போது கலியுகம் வலுப்பெறும். தேவ வருடங்கள் ஆயிரம் கழிந்ததும் கலியுக முடிவில் பகவான் கல்கியின் அருளால் ஸத்ய மார்கம் திரும்பும். 

நாம் கூறிய மன்னர்கள் எவருமே ‌இன்று இல்லை. ஆனால் அவர்களின் பெயரும் புகழும் நிலை பெற்றிருக்கின்றன.

இவர்கள் அனைவரும் நான் நான் என்ற அஹங்காரம் கொண்டவர்கள் தான். அனைவரையும் மண் கொண்டது. 

அரசன் என்றழைத்தாலும் இறந்தால் புதைத்தால் புழுவிற்கு இரை, நரி, நாய் முதலியவை தின்றால் அவற்றின் மலம், எரித்தால்‌ சாம்பல் என்றும் இவ்வுடல் மாறுகிறது. இவ்வுடலின் தொடர்பைக் கொண்டு பிறரைத் துன்புறுத்துபவன் வீறு நடை கொண்டு நரகத்திற்குப் பயணிக்கிறான் என்பதை அறிவாயாக. 

என்றார் ஸ்ரீசுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment