Tuesday, February 16, 2021

ஸ்ரீமத் பாகவத‌ பழம் - 629

சுங்க வம்சத்தினர் இப்புவியை ஆண்டபின் கண்வ வம்சம் தொடரும். மிகவும் அற்ப குணம் கொண்ட இவ்வம்சத்து அரசர்கள் காமப் பித்தேறியவர்கள். அவ்வம்சத்தின் கடைசி மன்னன் தேவபூதி. அவனை அவனது மந்திரி வசுதேவன் கொன்றுவிட்டு தானே மன்னனாவான். அவனது வம்சம் பூமித்திரன், நாராயணன், ஸுசர்மா, ஆகியோர். இவர்கள் நால்வரும் கண்வாயனர்கள் என்றழைக்கப்படுவர். ஸுசர்மா மிகவும் புகழ் வாய்ந்தவன். அவனை அவனது வேலைக்காரன் பலி என்பவன் கொன்றுவிட்டுத் தான் அரசன் ஆவான். அவனுக்குப் பின் அவனது சகோதரன் க்ருஷ்ணன் என்பவன் அரசனாவான். ஸ்ரீ சாந்தகர்ணன், பௌர்ணமாஸன், லம்போதரன், சிபிலகன், மேகஸ்வாதி, ஹாலேயன், அடமானன், தலகன், புரீஷபீரு, ஸுநந்தன், சகோரன், சிவஸ்வாதி என்று அவ்வம்சம் தொடரும். சிவஸ்வாதி மிகவும் பராக்ரமசாலி. அவனது மகன்கள் கோமதி, புரீமான் ஆகியோர். புரீமானின் மகன்  சிவஸ்கந்தன். அவன் மகள் யக்ஞஸ்ரீ. அவளது மகன் விஜயன். விஜயனின் இரு மகன்கள் சந்திர விக்ஞன், லோமதி ஆகியோர்.

இந்த முப்பது அரசர்களும் நானூற்றைமப்து வருடங்கள் இப்புவியை ஆள்வர். அவப்ருதி நகரத்து மன்னர்களான ஆபீரர்கள், கர்த்தபீ வம்சத்து அரசர்கள் பதின்மர், கங்கர்கள் பதினாறுபேர், ஆகியோர் புவியை ஆள்வர். அவர்கள் அனைவரும் தீய நடத்தை உள்ளவர்கள். இவர்களுக்குப் பிறகு யவனர்கள், பதினான்கு துருக்கியர்கள், பத்து குருண்டர்கள் ஆகியோர் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது வருடங்கள் ஆட்சி செய்வர். அதன் பின்  பதினோரு மௌனர்கள் முன்னூறாண்டுகள் அரசாள்வர். 

கிலிகிலா நகரத்தில் பூதநந்தன் என்பவன் ஆட்சி செய்வான். அவனுக்குப்பின் வங்கிரி, சிசுநந்தி யசோநந்தி, ப்ரவீரகன் ஆகியோர் நூற்றாறு வருடங்கள் ஆட்சி செய்வர். 

இந்த பூதநதனுக்கு பதிமூன்று பாஹ்லீகர்கள் பிறப்பர். அதன் பின் புஷ்பமித்திரன் மன்னனாகப் போகிறான். அவன் மகன் துர்மித்திரன்.

பாஹ்லீகர்கள் ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் ஆட்சி செய்வர். ஆந்திரம்,  கோசலம், விதுர தேசம், நிஷாத தேசம், ஆகியவை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட ப்ரதேசங்கள்.

விஸ்வஸ்பூஜி என்பவன் மகத மன்னன். இவன் அந்தணர்களை இழிவாக நடத்துவான். எல்லா வர்ணத்தவரிடையும் கலஹம் ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் பகையை மூட்டி நெறிகள் அனைத்தையும் அழிப்பான். இதனால் அனைத்து மக்களும் தர்ம நெறிகளின்று பிறழ்ந்து வேதநெறியைப் பழித்து மறநெறியை ஏற்பர். மன்னர்களும் அனைத்து சடங்குகளையும் விட்டுவிடுவர்.

அந்தணர்கள் தம் தர்மத்தைப் பின்பற்றாததால் தேஜஸை இழப்பர். மற்றவர்கள் பொய்யும் புனை சுருட்டுமாக பேதங்களோடு அலைவர். அதன் பின் மிலேச்ச ஆதிக்கம் துவங்கும்.

இதன் பின் வரப்போகும் அனைத்து மன்னர்களும் ஒழுக்கம் பிறழ்ந்து முற்றிலுமாக மிலேச்ச நெறியைப் பின்பற்றுபவர்களே. பலனை உத்தேசித்துச் செய்யும் கர்மாக்களில் கூட தானங்களைச் சரிவர அளிக்கமாட்டார்கள். 

பெண்கள், பசுக்கள், சான்றோர் என்றெல்லாம் பாராமல் கொலை நெறி நிகழும். பிறன் மனை, பிறர்பொருள் ஆகியற்றைக் கவர்வதில் ஊக்கமுடையவர்கள். இன்ப துன்பம் நிறைந்த வாழ்வின் சாரம் புரியாமல் மிகவும் துன்பப்படுவர். அற்பகுணம் கொண்டு உலகாயத பொருள்களுக்குப் பெருமகிழ்ச்சி அடைவர். இவர்களுக்குத் திறனும் குறைவு. ஆயுளும் குறைவு. 

பரம்பரைப் பழக்கங்கள் அனைத்தையும் விட்டொழித்து காண்பதே காட்சி கொள்வதே கோலம் என்று திரிந்து வாயளவில் தர்மம் பேசுபவர்கள். தமோ குணத்தினால் குருடர்களாவார்கள். இவர்கள் அரசுகட்டிலில் அமரும்போது ஆட்சியும் அவர்களுக்குத் தகுந்தவாறே அமையும்.

ஒருவரை ஒருவர் துன்புறுத்திக்கொண்டு, சுரண்டிப் பிழைத்து முடிவில் அகால மரணங்களால் அழிவார்கள்.

No comments:

Post a Comment