Thursday, July 8, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 660

ஸ்ரீ ஸூத பௌராணிகர் மேலும்‌ கூறலானார்.

ஆத்மானந்தத்திலே யே மூழ்கித் திளைத்திருக்கும் ஸ்ரீசுகமுனிவரை வணங்குகிறேன். பற்றற்று நீக்கமற நிறையும் அத்வைதமான பரம்பொருளில் கருத்தூன்றி நிற்பதால் உலகம் வேறு தாம் வேறு என்ற எண்ணம் அற்றவர். எனினும் ஜீவராசிகளின் மேலுள்ள கருணைப் பெருக்கால் இறையன்பை உணர்த்தும் இப்புராணத்தை நமக்கு அருளியிருக்கிறார். அனைத்துப் பாவங்களையும் போக்கவல்ல அந்த வியாசரின் மகனுக்கு என் வணக்கங்கள்.
ப்ரும்மா, இந்திரன், வருணன், மருத்கணங்கள் மற்றும் அனைத்து தேவர்களாலும் துதிக்கப்படும் பகவானை வணங்குகிறேன். ரிஷிகளும் முனிவர்களும் வேதங்கள், அதன் உபாங்கங்கள், மற்றும் உபநுஷத்துக்களால் எந்த பகவானைப் பாடுகின்றனரோ அந்த பகவானை வணக்குகிறேன்.
மனத்தை ஒருமுகப்படுத்தி சிறிது அசையாமல் எந்த பகவானை யோகிகள் தம் இதயத்தில் நிறுத்தி வழிபடுகின்றனரோ அந்த பகவானை வணங்குகிறேன்.
எவ்வளவு முயன்றும் எவராலும் யாருடைய உண்மை ஸ்வரூபத்தை இதுதான் என்று குறிப்பிட்டு அறிய முடியவில்லையோ அந்த பகவானை வணங்குகிறேன்.
பாற்கடல் கடையப்பட்டபோது, மந்தரமலை கடலில் அமிழ்ந்துபோகத் துவங்கிற்று. அதை பகவான் கீழிருந்து கூர்ம ரூபம் எடுத்து தாங்கினார். சுழலும் மாமலையின் கற்களின் உராய்வு முதுகு சொறிந்துவிடுவதுபோல் இருந்ததால் அவருக்கு உறக்கம் வந்தது. உறக்கத்தில் அவரது மூச்சு சற்று வேகமாக வெளிவரவே, அதனால் கடல் கொந்தளிப்படைந்து கரைகள் உடைந்து கலங்கிற்று. அவ்வேகமான மூச்சுக் காற்று நம்மை எப்போதும் காக்கட்டும்.
மேலே, புராணங்களிலுள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை, ஸ்ரீ மத் பாகவதத்தில் கூறப்படும் முக்கியமான விஷயம், அதன் பயன், தானம் செய்யும் முறை, பெருமைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
ப்ரும்மபுராணத்தில் 10000 ஸ்லோகங்களும், பாத்மபுராணத்தில் 55000 ஸ்லோகங்களும், ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் 24000 ஸ்லோகங்களும், ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் 18000 ஸ்லோகங்களும், நாரத புராணத்தில் 25000 ஸ்லோகங்களும், அக்னி புராணத்தில் ஸ்லோகங்களும் உள.
பவிஷ்ய புராணத்தில் 14500, ப்ரும்ம வைவர்த்த புராணத்தில் 18000, லிங்க புராணத்தில் 24000, வராஹ புராணத்தில் 24000, ஸ்காந்த புராணத்தில் 81100, வாமன புராணத்தில் 10000, கூர்ம புராணத்தில் 17000, மத்ஸ்ய புராணத்தில் 14000, கருட புராணத்தில் 19000, ப்ரும்மாண்ட புராணத்தில் 12000 என்பவை ஸ்லோகங்களின் எண்ணிக்கை.
இந்த பாகவதம் முன்பு, பகவானால் ப்ரும்மதேவருக்குக் கூறப்பட்டது. இந்நூல் முழுவதுமே பக்திக் கதைகளும், வைராக்யம் ஊறும் கதைகளுமாக விளக்கப்பட்டுள்ளன.
பகவானின் உண்மை ஸ்வரூபமே இந்நூலின் கருப்பொருள். முக்தியே நூலின் பயன்.
புரட்டாசி மாதத்தில் தங்க சிம்மாசனத்தில் இந்நூலை வைத்து தானம் செய்பவர் உயர்ந்த நிலையைப் பெறுகிறார்.
இந்த பாகவத புராணம் உலகில் ப்ரகாசிக்கும் வரையே மற்ற புராணங்களும் ஒளிரும். ஸர்வ வேதாந்த ஸாரம் என்று போற்றப்படும் இப்புராணத்தில் ஒரு முறை ஈடுபடுபவர் வேறெந்த நூலையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.
ஸ்ரீ மத் பாகவதம் மிகவும் தூயமையானது. விஷ்ணு பக்தர்களுக்கு மிகவும் பிரியமானது. மாயையின் கலப்படமே இல்லாதது.
இதைப் படிப்பவர், கேட்பவர், அதிலுள்ள கதைகளைச் சிந்திப்பவர் அனைவரும் சிறந்த பக்தியைப்‌பெற்று முக்தியடைகிறார்கள்.
ஸர்வ சாட்சியான,
ஸத்ய ஸ்வரூபனான பகவானுக்கு நமஸ்காரம்!
பரீக்ஷித் மன்னனுக்கு ஸ்ரீ மத் பாகவதத்தை உபதேசம் செய்து அவரை முக்தி பெறச் செய்த ஸ்ரீசுகாசார்யாருக்கு நமஸ்காரம்!
தோன்றிய காலம் முதல் இன்று வரை பாராயணம் செய்தும், ஸ்ரீ மத் பாகவதக் கதைகளைக் கூறியும் மக்களை உய்வித்து, இன்று நம் கைகளில் தவழும்படி செய்திருக்கும் ஸ்ரீ ஸத்குருநாதர் வரை அத்தனை கோடி மஹான்களுக்கும் கோடானு கோடி நமஸ்காரம்!
நாம ஸங்கீர்த்தனம் யஸ்ய
ஸர்வ பாப ப்ரணாசனம்
ப்ரணாமோ துக்க ஶமன:
தம் நமாமி ஹரிம் பரம்||
கூறிய மாத்திரத்தில் பாவங்களைக் களையும் நாமங்களை உடையவரும், சரணாகதி செய்த மாத்திரத்தில் துன்பங்களைக் களைந்து அமைதி நல்கும் திருவடிகளை உடையவருமான பகவான் ஸ்ரீ ஹரியை வண்க்குகிறேன்.
ஹரி: ஓம்.
தத் ஸத்||
ஸ்ரீமத் பாகவத புராணம் நிறைவுற்றது.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

1 comment:

  1. Great work. Thank you so much. It will be beneficial to many. You will be remembered forever for this offer. Thank you again.

    ReplyDelete