Sunday, July 4, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 658

ஸ்ரீமத் பாகவத ஸங்க்ரஹம் - 3

ஒன்பதாம் ஸ்கந்தத்தில் பரசுராமாவதாரம், இளையின் மகன் புரூரவஸ், யயாதி, நகுஷன், யதுவம்சம் ஆகிய கதைகளும் விளக்கப்படுகின்றன.
பத்தாவது ஸ்கந்தம் முழுவதும் பகவான் கண்ணனின் அவதாரக் கதைகளைக் கூறுவதாகும். பிறப்பு, நந்தன் வீட்டிற்கு மாற்றப்படுதல், பல்வேறு அசுரர்களுக்கு முக்தி அளித்தது, எண்ணற்ற லீலைகள், காட்டுத்தீயிலிருந்து கோபர்களைக் காத்தது, காளியனை அடக்கியது, மலைப்பாம்பிடமிருந்து நந்தனைக் காப்பாற்றிய கதை, கோபிகளின் காத்யாயனி விரதம், கண்ணன் அவர்களுக்கருளிய விதம், யக்ஞ பத்னிகளுக்கு அருள் செய்தது, கோவர்தன மலையைத் தூக்கிய கதை, கோவிந்த பட்டாபிஷேகம், ராஸக்ரீடை, சங்கசூடன், அரிஷ்டன், கேசி ஆகியோரின் வதம், அக்ரூரர் வருகை, கண்ணனும் பலராமனும் மதுரா செல்லுதல்.
குவலயாபீடம், மல்லர்கள், மற்றும் கம்ச வதம் ஆகிய கதைகள், சாந்தீபனியிடம் கல்வி பயின்றது, அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்ட கதை,
கண்ணன் உத்தவனோடும் பலராமனோடும் மதுராவில் நிகழ்த்திய பல இனிய லீலைகள், ஜராஸந்தனுடன் பன்முறை யுத்தம் செய்து பூபாரத்தைக் குறைத்தது, காலயவனனை முசுகுந்தரைக் கொண்டு வதம் செய்வித்தது, துவாரகா நிர்மாணம், அனைவரையும் ஒரே இரவில் அங்கே குடியமர்த்தியது.
ருக்மிணியை வென்று அழைத்துவந்து திருமணம் செய்தது, அஷ்ட மஹிஷிகளுடன் திருமணம், தேவலோகத்திலிருந்து கற்பகத் தரு, பாரிஜாத மலர் ஆகியவற்றை எடுத்துவந்தது,
பாணாசுர யுத்தம், அப்போரில் பரமேஸ்வரனைக் கொட்டாவி விடுமாறு செய்து அஸ்திரம் விட்டு, பாணாசுரனின் கரங்களை அறுத்தது.
ப்ராக்ஜோதிஷபுரத்தின் அரசனான நரகாசுரனின் வதம், பதினாயிரம் கன்னிகைகளை சிறை மீட்டு விவாஹம் செய்தது. சிசுபாலன், பௌண்ட்ரகன், சால்வன், தந்தவக்த்ரன், சம்பராசுரன், த்விவிதன், பீடன், முரன், பஞ்சஜனன் ஆகியோரின் வீரம், பகவான் அவர்களை அலட்சியமாக வதம் செய்த கதைகள், காசியை எரித்த கதை, மஹாபாரதப் போர் நிகழ்த்தி பூமியின் பாரத்தைக் குறைத்த லீலை ஆகியவை விளக்கமாகக்‌ கூறப்படுகின்றன.
பதினோராவது ஸ்கந்தத்தில் பகவான் அந்தண சாபத்தைக் காரணமாக வைத்து பல்கிப் பெருகி நின்ற யதுவம்சத்தை அழித்த கதை, உத்தவனுக்கும் கண்ணனுக்கும் நிகழ்ந்த உரையாடல். அதில் உண்மையான ஞானம், பக்தி, வாழ்வியல் நெறி, கண்ணன் பூவுலகை நீத்தது ஆகியவை கூறப்படுகின்றன.
பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் யுகங்களின் லட்சணங்கள், அவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலியுகம் பற்றிய விவரணம், நால்வகை பிரளயங்கள், மூன்றுவிதமான ச்ருஷ்டிகள், பரீக்ஷித் உடலைத் துறத்தல், வியாஸர் வேதங்களைப் பிரித்தல், மார்க்கண்டேயருக்கு மாயையின் தரிசனம், பகவானின் அங்கங்கள், உபாங்கங்கள், சூரிய பகவானின் கணங்கள் ஆகியவை விளக்கப்பட்டன.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment