Saturday, May 8, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 639

வெகு வேகமாகச் சுழன்றுகொண்டு யாக குண்டத்தை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்திர விமானத்தைக் கண்டார் ப்ருஹஸ்பதி. அவர் ஆங்கீரஸ மஹரிஷியின் மகனாவார்.
உடனே ஜனமேஜயனைப் பார்த்துக் கூறத் துவங்கினார்.

அரசே! இந்த தக்ஷகன் அமுதம் உண்டவன். அதனால் மரணமற்றவன். இவனைக் கொல்வது இயலாது. 

ஜீவராசிகள் எல்லாம் தத்தம் வினைப்பயனுக்கேற்ப வாழ்வைப்‌ பெறுகின்றன. இறப்புக்குப் பிறகு பரலோகம் செல்வதும் வினைப்பயனாலேயே தீர்மானிக்கப்படுகிறது. முன் வினைப் பயனைத் தவிர வேறொருவரால் எந்த ஜீவனுக்கும் இன்பத்தையோ துன்பத்தையோ தர இயலாது. 

இவ்வுலகில் பலருக்கும் மரணம் ஏற்படுவதன் காரணம் பாம்பு, திருடன், நெருப்பு, பசி, தாகம், நோய், விபத்து ஆகியவையே ஆகும். இவையெல்லாம் மரணத்திற்குக்  காரணங்கள் அல்ல. ஒருவரின் முன்வினைப்படி இவை ஏவப்படுகின்றன.

இந்த சர்ப்பயாகத்தை இத்துடன் நிறுத்திவிடுவாய். குற்றமற்ற பல அப்பாவி சர்ப்பங்கள் இத்தீயில் பலியாகிவிட்டன. போதும். என்றார்.

வியாழ பகவானின் கூற்றைக் கேட்ட ஜனமேஜயன் அவரை வணங்கி, தங்கள் கட்டளைப்படி செய்கிறேன் என்று கூறினான். சர்ப்ப யாகத்தை உடனே நிறுத்தினான். ப்ருஹஸ்பதியை முறைப்படி பூஜை செய்தான்.

பரிக்ஷித் சமீகரின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டது, அவர் மகன் ச்ருங்கி கோபமுற்றுச் சபித்தது, அச்சாபத்தின்படி தக்ஷகன் கடித்து மன்னன் இறந்தது, ஜனமேஜயன் சினமுற்று சர்ப்பயாகம் செய்தது, அந்த யாகத்தில் பல பாம்புகள் இறந்தது என்று ஏழு நாள்களில் நிகழ்ந்த  அனைத்து நிகழ்வுகளையும்  உற்றுக் கவனித்தால் அவை எதனாலோ செலுத்தப்படுவது புரியும். அனைத்திற்கும் காரணம் மாயை. மாயைதான் வினைப்பயனின்படி ஒவ்வொருவரையும் ஆட்டுவிக்கிறது‌. 

இவ்வுடலை நித்யமானது என்றும் அதையே ஆத்மா என்றும் எண்ணுபவர்களால் நிச்சயம் இச்சுழலினின்று வெளிவர இயலாது. அவர்கள் தம்மையும் தம்மைச் சார்ந்தவரையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றனர். 

மனிதர்களைப் பற்றிப் பேசும்போது அவர்களின் தீயகுணங்களைப் பேசத் தூண்டுவது மாயைதான். பகவானைப் பற்றிப் பேசும்போது மாயை வேலை செய்யாது. பேசாமல் ஒதுங்கி நிற்கும். அழியாது. மாயைக்குப் பற்றி நிற்க ஏதோ ஒரு பொருள் வேண்டும். இம்மை மறுமை ஆராய்ச்சியைத் துவங்கினால் மனம் தானே அடங்கும். மனமே இல்லாத, சங்கல்பமே இல்லாத, பரமாத்மாவிடம் மாயைக்குப் பற்றிக்கொள்ள ஏதுமில்லை.

ஒரு செயல், அதைச் செய்யத் தேவையான பொருள்கள், அதனால் விளையும்‌ புகழ் இவற்றுடன் சேரும்.  செய்பவன் நான் எனது என்ற அஹங்காரத்தைப் பற்றிக்கொள்கிறான். பரமாத்மா எவருக்கும் பகைவனில்லை. அதைப் பற்றுபவனுக்கு அஹங்காரம் அழிகிறது. 

விடுதலை அடைய விரும்புபவன், இறைவனின் பதத்தைத் தவிர மீதி அனைத்தையும் இது உண்மையில்லை என்று தள்ளவேண்டும். எதைத் தள்ளவே இயலாதோ அதுவே பரம்.

அதுவே பகவானின் ஸ்வரூபம். இப்பதத்தைப் பெற விரும்புபவன், வசைச் சொல்லையும், புகழ்ச்சியையும் ஒன்றாய் ஏற்கவேண்டும். எந்த ஜீவனிடமும் பகை கொள்ளக்கூடாது.

ஸ்ரீ வியாஸ பகவானிடமிருந்து இந்த குறைவற்ற புராணமாகிய ஸ்ரீமத் பாகவதத்தைக் கற்றேன். அந்த குணக்குன்றை இத்தருணத்தில் வணங்குகிறேன்.
என்றார் ஸூத பௌராணிகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment