Thursday, May 27, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 643

யாக்ஞவல்க்யரின் ஸ்துதியைக் கேட்டு மகிழ்ந்த சூரிய பகவான் அவர் முன் குதிரை முகத்துடன் தோன்றினார்.  இதுவரை எவராலும் அறியப்படாத யஜுர்வேத சாகைகளை போதித்தார்.

மிகவும் அரிய அந்த வேத சாகைகளை யாக்ஞவ்ல்க்யர் பத்தாகப் பிரித்தார். மிகவும் வேகமாக உபதேசிக்கப்பட்ட அந்த மந்திரங்கள் வாஜஸந்ய சாகை எனப் பெயர் பெற்றன‌. 

ஜைமினி தான் கற்ற சாமவேதத்தை தன் மகனான ஸுமந்துவுக்கும் அவர் மகனான ஸுந்வானுக்கும் கற்பித்தார்.

ஸுகர்மா என்பவர் ஜைமினியின் மற்றொரு சீடர். இவர் ஸாமவேதத்தை ஆயிரம் கிளைகளாகப் பிரித்தார்.

ஸுகர்மாவின் சீடர்கள் இரண்யநாபன், பௌஷ்யஞ்சி, ஆவந்தியன் ஆகியோர். இவர்கள் மூவருக்கும் வட தேசத்தைச் சேர்ந்த ஐந்நூறு சீடர்கள் இருந்தனர். இவர்கள் உதீச்ய ஸாமவேதிகள் என்றழைக்கப்பட்டனர். 

பௌஷ்யஞ்சியின் சீடர்கள் லோகாக்ஷி, மாங்கலி, குல்யன், குஸீதன், குக்ஷி, ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தலா நூறு ஸம்ஹிதைகளைக் கற்றனர்.

இரண்யநாபரின் சீடரான கிருதன் தன் சீடர்களுக்கு இருபத்து நான்கு ஸம்ஹிதைகளை உபதேசம் செய்தார். மீதியை ஆவந்தியர் தன் சீடர்கள் மூலம் பரப்பினார்.

அதர்வண வேதம் ஸுமந்து என்பவரால் பரவிற்று. அவருடைய சீடர் ஸுபந்தன் தான் கற்றதை பத்யர், வேதசர்யர் ஆகியோர்க்கு உபதேசம் செய்தார்.

வேதசர்யருக்கு சௌக்லாயனி, ப்ரும்மபலி, மோதோஷர், பிப்பலாயனி என்ற நால்வர் சீடரவர்.

பத்ரரின் சிஷ்யர்கள் குமுதன், சுனகர், ஜாஜலி ஆகியோர். சுனகர் தன் சீடர்களான பப்ரு, ஸைந்தவாயனர் ஆகியோர்க்கு இரு ஸம்ஹிதைகளை உபதேசம் செய்தார். ஸர்வாணி, நக்ஷாத்ரகல்பர், சாந்திகல்பர், கசியபர், ஆங்கீரஸர் ஆகியோரும் அதர்வண வேதத்தைப் பரப்பினர். 

இனி புராண பிரவசனம் செய்யும் புராணிகர்கள் பற்றிப் பார்க்கலாம்.

த்ரய்யாருணி, கசியபர், ஸாவர்ணி, அக்ருதவிரணர், வைசம்பாயனர், ஹாரிதர் ஆகியோர் பௌராணிகர்கள்.

இவர்கள் அனைவரும் தம் தந்தையான ரோமஹர்ஷணரிடம் ஒவ்வொரு புராணத்தைக் கற்றனர். ரோமஹர்ஷணர் வியாஸரின் நேர் சீடராவார். நான் இந்த ஆறு ஆசார்யர்களிடமும் சீடனாக இருந்து அனைத்துப் புராணங்களையும் கற்றேன் என்றார் ஸூத பௌராணிகர்.

இந்த ஆறு புராணங்கள் தவிர மேலும் நான்கு மூல ஸம்ஹிதைகளை கச்யபர், ஸாவர்ணி, அக்ருதவிரணர், என் தந்தை ரோமஹர்ஷணர் ஆகியோரிடம்‌ கற்றேன்.

சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்து புராணங்களின் இலக்கணங்கள் வகுக்கப் படுகின்றன. 

புராண லக்ஷணங்கள் பத்து.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

படக்குறிப்பு:

நைமிஷாரண்யத்தில் உள்ள வேத வியாஸர் ஆசிரமத்தில் உள்ள 5000 வருடங்கள் பழமையான ஆல மரம். இதன் அடியில் அமர்ந்து வியாஸர் வேதங்களைத் தன் சீடர்களுக்குக் கற்பித்தார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment