Wednesday, May 19, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 640

சௌனகர் கேட்டார்.
பகவான் வியாஸர் வேதங்களை தம் சீடர்களுக்குக் கொடுத்தார் அல்லவா? அவர்கள் அதை  எத்தனையாகப் பிரித்தார்கள்? என்றார்.
ஸூத பௌராணிகர்  பதிலிறுக்கத் துவங்கினார்.

ஒரு சமயம் ப்ரும்மதேவர் படைப்பு பற்றி அறிவதற்காக தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவருடைய ஹ்ருதயத்திலிருந்து நாக்கு தொண்டை ஆகியவற்றின் தொடர்பின்றி ஒரு ஒலி எழுந்தது. 

வெளியிலிருந்து எழும் ஓசைகள் கேட்காத வண்ணம் காதுகளைப் பொத்திக்கொண்டு மனத்தை அடக்கி அமர்ந்தால் இதயத்திலிருந்து எழும் இந்த அநாஹத ஒலியைக் கேட்கலாம். 

இந்த நாதத்தை விடாமல் கேட்பதன் மூலம் அத்தனை விதமான மன மாசுகள் மற்றும் வாஸனைகளை அடக்கி உள்ளத் தூய்மை பெற்று இறைநிலையை அடைந்து விடுகின்றனர் யோகிகள். அவர்கள் பிறவிச் சுழலில் சிக்குவதில்லை.

இந்த அநாஹதத்திலிருந்து ப்ரணவம் தோன்றுகின்றது. அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்று மாத்திரைகள் அளவிலான ஒலிகளைக் கொண்டது. இந்த ப்ரணவத்தினால் கண்களுக்குப் புலப்படாத ப்ரக்ருதியின் சக்திகள் அனைத்தும் தெளிவாகத் தெரியத் துவங்கும்‌. இவ்வொலி அநாதியானது‌. நாத ரூபமான இறைவனே ஆகும்‌. எனவே தனித்தியங்கும் சக்தி கொண்டது. செவி இயங்கவில்லை என்றாலும் அநாஹதம் இயங்கும். ப்ரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களிலும் உறையும் பரம்பொருளை உணர்வுபூர்வமாக காட்டித் தரும் சக்தி கொண்டது ப்ரணவமாகும்.

பகவானின் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்படும் இந்த ஓங்காரத்தினின்றே வேதங்கள் தோன்றின. இதன் இருப்பிடம் பகவானே ஆவார். ஓங்காரத்தைப் பிடித்துக்கொண்டு பயணிப்பவன் அதன் இருப்பிடத்தை அறிகிறான். ஓங்காரத்தின் மூன்று ஒலிகளும்  ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும், ரிக், யஜுர், ஸமம் என்ற மூன்று வேதங்களையும், பூ, புவி:, ஸுவ: என்ற மூன்று லோகங்களையும், ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளையும் குறிக்கின்றன. 

இதன் பின் ப்ரும்மா ஓங்காரத்தினின்றே அ முதல் துவங்கும் அனைத்து எழுத்துக் கூட்டங்களையும், ஒலிக்கூட்டங்களையும் கண்டுபிடித்தார்.

பிறகு தனது நான்கு முகங்களின் வாயிலாக நான்கு வேதங்களையும் வெளியிட்டார். பின்னர் தன் புதல்வர்களுக்கு அவற்றை உபதேசம் செய்தார். அப்படியே வழி வழியாக வேதம் பரவிற்று.

வேதங்களைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்ட நைஷ்டிக ப்ரும்மச்சாரிகளால் வேதம் ப்ரப்பப்பட்டு வந்தது. துவாபர யுகத்தின் முடிவில், அநாதியாக இருந்த வேதங்களை பகவானின் அவதாரமாக வந்த வியாஸர் நான்காகப் பிரித்தார். 

பெரிய நவரத்தினக் கூட்டங்களிலிருந்து ஒவ்வொரு மணியாக எடுத்து வகைப் படுத்துவது போல மந்திரக் கூட்டங்களிலிருந்து  அவற்றின் ஒலி,  பொருள் மற்றும் பயன்களுக்கேற்றவாறு பிரித்து ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்று பெயரிட்டார்.

அவற்றைத் தன் நான்கு சீடர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment