Friday, May 7, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 638

பரிக்ஷித்தைத் தீண்டுவதற்காக வந்து கொண்டிருந்தபோது வழியில்  தக்ஷகன் ஒரு அந்தணனைக் கண்டான்.
அவன் பெயர் கச்யபன் என்பதாம். அவன் ஒரு சிறந்த மருத்துவன். எப்படிப்பட்ட விஷமானாலும் அதை முறித்து உயிர் பிழைக்கச் செய்துவிடுவான்.

 தக்ஷகன் அவனை விசாரிக்க, அவன் மன்னன் பரிக்ஷித்தை உயிர் பிழைக்கவைத்தால் எனக்கு நிறைய தானங்கள் தருவார் என்றான். தக்ஷகனோ உனக்கு ஏராளமான செல்வத்தை நானே தருகிறேன், வந்த வழியே திரும்பிச் செல் என்று கூறி, நாக லோகத்தின் சிறந்த செல்வங்களை அவனுக்கு வாரிக்கொடுத்து அனுப்பிவிட்டான். 

அதன் பின் தக்ஷகன் ஒரு அந்தணன் போல் வேடமிட்டு பரிக்ஷித்தின் அருகில் சென்று சடாரென்று எவரும் எதிர்நோக்காத தருணத்தில் கடித்துவிட்டான். 

பரிக்ஷித் ஏற்கனவே விழி மூடி ப்ரும்ம நிஷ்டையில் ஆழ்ந்து லயித்திருந்தான். அவனுக்கு உடல் பற்றிய அறிவே இல்லை. 

மிகவும் பயங்கரமான விஷமுடைய தக்ஷகனின் பல் பதிந்ததும் அதன் விஷத்தால் எழும்பிய ஜ்வாலையில் பரிக்ஷித்தின் உடல் கருகிச் சாம்பலானது.

வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் ஹா என்று கூச்சலிட்டனர். மிகவும் வியந்தனர். பரிக்ஷித் மீளாப்பதம் அடைந்தது கண்டு பூமாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் முழங்கின.

பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் தன் தந்தையின் விஷயங்களைக் கேள்வியுற்று மிகச் சினந்தான்.

அந்தணர்களை அழைத்து சர்ப்பயாகம் என்ற வேள்வியைத் துவக்கினான். மந்திரங்களின் மூலம் ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள பாம்புகளை ஆகர்ஷித்து அக்னி குண்டத்தில் ஆகுதியாக விழச் செய்தான். 

அவ்வேள்வித்தீயில் மாபெரும் சர்ப்பங்கள் எல்லாம் தன்னிலை இழந்து வந்து பொத் பொத்தென்று விழுந்து கருகிச் சாம்பலாயின. அதைக் கண்ட தக்ஷகன் பயந்துபோனான். ஓடோடிச் சென்று  இந்திரனைச் சரணடைந்தான். 

எல்லாப் பாம்புகளும் வந்தபோதிலும் தக்ஷகன் மட்டும் வராதது கண்டு ஜனமேஜயன் அந்தணர்களைக் கேட்டான்.

எல்லாப் பாம்புகளும் வருகின்றன. தக்ஷகன் மட்டும் ஏன் இன்னும் வரவில்லை? யாகத்தில் ஏதாவது தோஷமா? என்றான். 

அதற்கு அவர்கள் தக்ஷகன் இந்திரனைச் சரணடைந்த விஷயத்தைக் கூறினர். இந்திரன் காப்பதால் தக்ஷகன் வரவில்லை என்று கூறினர். அதைக் கேட்ட ஜனமேயன், இந்திரனோடு சேர்ந்து தக்ஷகன் இவ்வேள்வித்தீயில் விழும்படி மந்திரம் சொல்லுங்கள் என்றான்.

உடனே அந்தணர்கள் இந்திரனை ஆகர்ஷிக்கும் மந்திரங்களைக் கூறத் துவங்கினர்.

தக்ஷகனையும் சேர்த்து அழைத்தனர். உடனே தேவலோகம் நடுங்கத் துவங்கியது. இந்திரன் தக்ஷகனோடு விமானத்திலிருந்தான். அவ்விமானம் சுழலத் துவங்கியது. தேவேந்திரன் பயந்து அலறினான். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment