Friday, October 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 338

தம் அத்புத பாலகம் என்று அழைக்கிறார் ஸ்ரீ சுகர். அத்புத பாலகன் அங்கு தோன்றியதை வசுதேவர் பார்த்தார்.

கர்பவாசம் இருந்தாரே தவிர யோனி வழியான அவதாரமில்லை. வயிற்றில் மறைந்து கண்ணெதிரே தோன்றினார்.

ஐந்து லிட்டர் பாலை அரைக் கரண்டியாகச் சுண்டக் காய்ச்சினால், அதன் சுவை எப்படி இருக்கும்?
அப்படியாக அகிலத்தையே படைத்து, அதற்கு ஆதாரமாகவும் விளங்கும் பகவான், ஒரு அடி உயரத்தில் , அத்தனை அழகையும் திரட்டிக்கொண்டு குட்டியாக அத்புத பாலகனாக வந்திருக்கிறான்.

உலகத்துச் சிசுக்கள் பிறந்ததும் அழும். அம்மா சமாதானப் படுத்துவாள். ஆனால் இங்கே,
வந்திருக்கும் குழந்தைக்கு கம்சனால் ஆபத்து வருமோ என்று அஞ்சி அம்மா அழப்போகிறாள். அற்புதக் குழந்தை சமாதானப்படுத்தப்போகிறது.

பிறந்த குழந்தை பேசுமா? பிறந்ததுமே இந்த அற்புதக் குழந்தை பேசப்போகிறது.

உலகிலுள்ள குழந்தை தவறு செய்தால், பிரம்மா உன்னை இப்படி படைத்தாரே என்று திட்டுவார்கள். ஆனால், இந்த அற்புதக் குழந்தைதான் பிரம்மாவையே படைத்ததாம்.

தன்னைக் கொண்டுபோய் மற்றொரு வீட்டில் விட்டு வரும்படி சொல்லப்போகும் அற்புதக் குழந்தை. எந்தக் குழந்தையாவது சொல்லுமா?

குழந்தை பிறந்ததும் பெற்றோரும், உற்றாரும் ஆடை, அணிகலன்கள் பூட்டுவர். அப்படி எதற்கும் அவசியமில்லாமல், பிறக்கும்போதே எல்லா ஆடை அணிகலன்களுடனும், ஆயுதங்களுடனும் வந்த அற்புதக் குழந்தை.

அற்புதமான தெய்வக் காட்சியைப் பிறந்ததுமே தாய் தந்தையர்க்குக் கொடுத்த குழந்தை. சாதாரணக் குழந்தையாக மாறு என்று பெற்றவளால் வேண்டப்பட்ட அற்புதக் குழந்தை.

தன்னை நினைப்பவர், தன் பெயர் சொல்பவர், தன்னைக் காண்பவர் அனைவரையும் ஸம்சாரச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக பாதாளச் சிறையில் அவதரித்த அற்புதக் குழந்தை.

ஸர்வ சக்தனாக இருந்தும் குழந்தைபோல் அன்புக்குக் வசப்படுவேன் என்று நிரூபிக்க‌வந்த அற்புதக் குழந்தை.

அற்புதக் குழந்தையாக பகவான் பூவுலகில் தோன்றியதை வசுதேவர் பார்த்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment