Tuesday, February 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 395

மழைக்கால வர்ணனம்

இந்த அத்யாயம் முழுவதும் ஸ்ரீசுகர் பல்வேறு ஆச்சரியமான உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம், ஸத்சங்கம், நாம கீர்த்தனம், கதா ச்ரவணம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அவற்றோடு சேர்ந்து அவரவர்க்கான தர்மம், பூகோள வர்ணனை, பதினான்கு லோகங்களின் வர்ணனை, ஸ்வர்க‌நரக வர்ணனை, நதிகளின் மேன்மை,  வாழ்வியல் நெறி, மொழிப்புலமை,  சமயோசித புத்தி, மனோ தத்துவம், சாங்க்ய யோகம், என்று ஸ்ரீமத் பாகவதம் பேசாத விஷயமே இல்லை. 

இவை தவிர ஏராளமான ஸ்துதிகளும் கொண்டது ஸ்ரீமத் பாகவதம்.

எல்லா உயிரினங்களும் கிளைத்துத் தழைக்கும் பெருமழைப் பருவம்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் பரிவட்டம் கட்டி, இடி மின்னல் வாத்யங்களுடன் துவங்கிற்று.

ஆகாயம் எப்படி இருந்தது? ப்ரும்ம ஸ்வரூபமே ஆனாலும் முக்குணங்களால் மறைக்கப்பட்ட ஜீவாத்மாவைப் போல நீருண்ட மேகங்கள் சூரிய, சந்திர, நக்ஷத்ரங்களை மறைத்திருந்தன.

எட்டு மாதங்களாக சூரியன்  உறிஞ்சி எடுத்த நீர்ச் செல்வத்தை மேகதேவதை திரும்பி வழங்கத் துவங்கினார்.

நல்லோர் பசி தாகத்தால் தவிப்பவர்க்கு உணவும் நீரும் அளிப்பது போல் மின்னல் கொண்ட பெருமேகங்கள் இவ்வுலகிற்கு நீரை வழங்கின.

கடுந்தவம் செய்து உடல் வற்றியவன் அதன் பலனைப் பெறும் சமயத்தில் சட்டென்று புஷ்டி அடைவதைப்போல, கோடையின் கொடும் வெப்பத்தினால் சுருங்கிய பூமி, மழையைப்‌ பெற்றதும் செழிப்புற்றது.

கலியுகத்தில் பாவங்களின் வலிமையால் நாத்திகப் பிரசாரம் மேலோங்கும். வேதம் மங்கி நிற்கும். அதுபோல் மேகம் சூழ்ந்த இரவில் நக்ஷத்திரங்கள் ஒளிராமல், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்ந்தன.

அனுஷ்டானங்கள் முடிந்ததும் குருவின் அனுமதியோடு வேதபாராயணப் பயிற்சியைத் துவங்கும் பாடசாலைக் குழந்தைகளைப் போல், மழையைக் கண்டதும் உறங்கிக்கொண்டிருந்த  அத்தனை தவளைகளும் சத்தமிடத் துவங்கின.  

புலனடக்கமின்றி தீய வழியில் செல்லும் மனிதனின் செல்வம் தடம் புரள்வதைப்போல் கோடையில் வரண்டிருந்த சிற்றாறுகளில் மழை வந்ததும் வெள்ளம் தாறுமாறாகக் கரை புரண்டோடியது.

பூமி பசும்புற்களால் பச்சையாகவும், பூச்சிக்கூட்டங்களால் சிவந்தும், நாய்க்குடைகளால் மூடப்பட்டு வெளுத்தும் காணப்படுவது ஒரு அரசனின் பல்வேறு படைகளின் அணிவகுப்பைப் போல் இருந்தது.

வயல்கள் செழித்ததால் உழவர்களுக்கு மனநிறைவு ஏற்பட்டது. எல்லாம்‌ இறைவன் செயல் என்றுணராத  செல்வச் செழிப்புள்ளவர்களுக்கு‌ அது பொறாமையை ஏற்படுத்தியது.

ஹரி பக்தர்கள் இறை சேவையால் உள்ளும் புறமும் அழகைப் பெற்று ஒளிர்வர். அதுபோல் நீரிலும் நிலத்திலும் வாழும் அனைத்துப் பிராணிகளும் புது நீரால் புத்தழகு பெற்று மிளிர்ந்தன.

பக்குவமாகாத யோகியின் சித்தம் காமத்தினால் கொந்தளிக்கும். அதைப்போல் பெருமளவு ஆற்றுநீர் புகுந்ததும் கடல் கொந்தளித்தது.

பகவானிடம் முழுமையாக ஈடுபட்டவர்கள் எத்தகைய துன்பம் வந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். அதுபோல், எவ்வளவு பெரிய மழை பெய்த போதிலும்‌ மலைகள் அசைந்து கொடுக்க வில்லை.

வேதங்களை தினமும் ஓதவேண்டிய அந்தணர்கள் அதைச் செய்யாதபோது, காலத்தால் மறைக்கப்படும். அதைப்போல் கால்ம் காலமாக ஒரே வழியில் நடப்பதனால் தோன்றும் ஒற்றையடிப்பாதைகள் மழைக்காலத்தில் புற்களால் மூடப்பட்டிருந்தன.

மின்னி கணப்பொழுதில் மறைவதால் மின்னல் எனப்பட்டது. அவ்வொளி நிலைத்து நிற்காது. நற்குணங்கள் நிரம்பியவரிடம், விலைமாதர்கள் நிலையான அன்பு வைக்கமாட்டர்கள் அதுபோல் மின்னல் ஒளியும் நிலையில்லாமல் இருந்தது.

முக்குணங்களால் உருவம் பெற்ற உடலில் எந்தத் தொடர்பும் இன்றி ஜீவாத்மா பிரவேசித்து வாழ்கிறது. அதைப்போல் மேகமுள்ள வானில் எந்தத் தொடர்பும் இன்றி வானவில் பிரகாசிக்கிறது.

தன்னொளியால் விளங்கும் ஜீவன் நான், எனது என்ற அஹங்காரத்தால் ஒளி மங்குகிறான். அதுபோல் மேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு ஒளிமங்கிக் காணப்பட்டது.

இல்லறத்தார்கள் சாதுக்களின் வருகையைக் கண்டு மகிழ்வதுபோல் மேகங்களைக் கண்டதும் மயில் கூட்டம் மகிழ்ந்து ஆடியது.

தவம் செய்து வாடிக் களைத்தவர்கள், அதன் பயனை அனுபவிப்பதுபோல், மரங்கள் வேர்களின் வழியே நீர் பெற்றுச் செழிப்புற்றன.

எவ்வளவு தொல்லைகள் இருந்தபோதும் உலகியல் பற்றுள்ளவர்கள் வீடுகளிலேயே ஈடுபாடு கொள்வர். அதுபோல் சேற்றால் ஓடைகள் கலங்கியிருந்தபோதும் சக்ரவாகப் பறவைகள் அங்கேயே வசித்தன.

நாத்திகர்களின் தவறான வாதங்கள் வேத மார்கங்கள் சீரழிவதுபோல் ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அணைகள் உடைந்தன.

இன்னும் பல உதாரணங்களுடன் ப்ருந்தாவனத்தில் மழைக் காலத்தின் காட்சியை ஸ்ரீ சுகர் விளக்குகிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment