Wednesday, February 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 396

பெருமழை பொழிந்து செழிப்படைந்த பேரீச்சம்பழங்களும் நாவல் பழங்களும் பழுத்துக் குலுங்குகின்ற காட்டிற்குள் பசுக்களும் இடையர்களும் சூழ, கண்ணன் பலராமனுடன் சென்றான்.

பால் சுரப்பால் கனத்த மடிகளுள்ள பசுக்கள்‌ மெதுவாக நடந்து வந்தன. கண்ணன் அவற்றின் பெயரைச் சொல்லி அழைத்தாலே பாலைச் சொரிந்தன.

காட்டுவாசிகள் மகிழ்ச்சியாக வசித்துக் கொண்டிருந்தனர்‌. பூக்களினின்று ஒழுகும் தேன் மரங்களின் மீது வழிந்து கொண்டிருந்தது. நிறைந்து பாயும் அருவிகள், எதிரொலிக்கும் மலைகள், குகைகள் அனைத்தையும் கண்ட கண்ணன் மிகுந்த மகிழ்ச்சியுற்றான்.

அவ்வப்போது இதமான காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போதெல்லாம் மரப்பொந்துகளிலோ குகைகளிலோ அமர்ந்து வேர்கள், கிழங்குகள் ஆகியவற்றை உண்டு மகிழ்ந்தனர்.

யமுனையின் அருகே இருந்த பெரிய கல்லின் மீதமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவைக் கண்ணன் உண்டான்.

இஷ்டம்போல் மேய்ந்துவிட்டு, த்ருப்தியுடன் படுத்து அசைபோடும் பசுக்களையும், மடியில் பால் நிறைந்திருப்பதால் திணறும் பசுக்களையும், மழைக் காலத்தின் அழகையும் கண்ட கண்ணன் பலராமனிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தான்.

நிறைய பயிற்சிகள் செய்த யோகியின் சித்தம் தெளிவடைவதைப்போல் நீர்நிலைகளில் நீர் தெளிந்திருந்தது. தாமரைகள் மலர்ந்திருந்தன. 

கண்ணனிடம் கொண்ட பக்தி, குரு அளிக்கும் கல்வியைக் கற்க முடியாமல் மறைக்கும் அறியாமையை நீக்குகிறது. இல்லறத்தானுக்கு உலகியல் வாழ்வில் உள்ள பேராசையை நீக்குகிறது. வானப்ரஸ்தனுக்கு தன் நியமங்களைச் செய்யும்போது ஏற்படும் தடைகளை விலக்குகிறது. துறவிகளுக்கு பாவ புண்ய வாசனைகளைத் தொலைக்கிறது. அதைப்போல் இந்த வசந்த காலம் ஆகாயத்திலுள்ள மேகத்தை நீக்குகிறது. மழைக்காலத்தில் உயிரினங்கள் வெளியில் செல்ல முடியாமல் அடைந்து கிடந்தன. இப்போது அவை வெளியில் வந்து ஒன்றை ஒன்று கண்டு அன்பு செலுத்துகின்றன. பூமியுன் சேற்றையும் நீரின் கலங்கலையும் போக்கி தெளிவடையச் செய்கிறது.

முனிவர்கள் உலகப்பற்றை விட்டு பாவம் நீங்கி அமைதியுடன் இருப்பதுபோல், மேகங்கள் தங்கள் செல்வமான நீரை உலகிற்கு அளித்துவிட்டு வெண்மையாக விளங்கின.

ஞானியானவன் சிலசமயம் மோனத்திலும், சில சமயம் ஞானத்தைப் போதித்துக்கொண்டும் இருப்பார். அதுபோல் மலைகள் சில இடங்களில் அருவிகளாக நன்னீரைக் கொட்டின. சில இடங்களில் சுனைகளாகத் தேக்கிவைத்துக்கொண்டன.

அறிவிலிகள் தினமும் ஆயுள் குறைவதை உணர்வதில்லை. அதுபோல் நீர்வாழ் பிராணிகள் நீர்நிலைகளில் நீர் குறைவதை உணரவில்லை.

பெரிய குடும்பமுள்ள ஏழை புலனடக்கமில்லாததால் துன்பமுறுவான். அதுபோல் நீர்நிலை வாழ் பிராணிகள் வெப்பத்தை உணர்ந்தன.

ஞானிகள் நான் எனது என்ற பற்றை விடுவதுபோல் பூமி சேற்றை விட்டது.

யோகிகள் பிராணனைக் கட்டுப்படுத்தி புலன் வழியாக புத்தி வெளியே சென்று உலக அறிவைக் கொண்டு வருவதைத் தடுப்பார்கள். அதுபோல் விவசாயிகள் வயலினின்று நீர் வெளியேறாமல் தடுத்தனர்.

உடலே நான் என்ற அறிவை ஞானம் நீக்கும். கண்ணன் கோபியரின் தாபத்தை நீக்கினான். இவற்றைப்போல் சூரிய வெப்பத்தால் வரும் துன்பத்தை சந்திரன் அகற்றினான்.

உபநிடதங்களின் பொருளை உணர்ந்தவன் ஸத்வ குண மிகுதியால் சித்தம்‌ தெளிந்து விளங்குவான். அதுபோல் வானம் மேகமின்றி நக்ஷத்ரங்கள் மின்ன விளங்கிற்று.

கண்ணன் யாதவர்கள் வட்டமிட புவியில் விளங்குவதுபோல் சந்திரன் வானில் நக்ஷத்ரக் கூட்டங்களுடன் விளங்கினான்.

வெம்மையும் குளிரும் சமநிலையில் இருந்ததால் மக்கள் தாபம் நீங்கப் பெற்றனர். ஆனால் கோபியருக்கோ தாபம் அதிகரித்தது.

நற்செயல்களை அவற்றின் பலன் பின் தொடரும். அதுபோல் விலங்குகளும், பறவைகளும், பெண்களும் காமவயப்பட்ட தம் காதலர்களால் பின்தொடரப்பட்டனர்.

நல்ல அரசனின் வரவால் திருடர் பயம் நீங்கி உலகம் பயமற்று வாழும்‌. அதுபோல் சூரியன் உதித்ததும் அல்லிப்பூக்கள் நீங்கி தாமரைகள் மலர்ந்தன.

புனிதப் பணிகள் செய்து சித்தி பெற்றவர்கள் மறுமையில் தேவர் முதலிய பிறவிகளை அடைவர். அதுபோல் மழையால் வெளிச் வெல்ல இயலாமல் இருந்த வணிகர்களும், உயர்கல்வி பெற வெளியில் செல்பவர்களும் இப்போது இடம்‌பெயர்ந்து விரும்பிய பயனைப்‌ பெற்றனர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment