Friday, February 7, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 393

ஒரு சமயம் கடுங்கோடை வந்தது. சூரியன் தன் வெப்பத்தினால் பூமியை அப்படியே உறிஞ்சி எடுத்ததைப் போல் இருந்தது. ஆனாலும், கண்ணனின் சம்பந்தத்தால் ப்ருந்தாவனம் மட்டும் குளிர்ச்சியாகவும், வசந்த ருதுவைப் போலவும் காட்சியளித்தது.

எங்கும் பசுமை நிரம்பிய ப்ருந்தாவனத்தில் விளையாடுவது கண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தன் நண்பர்களையும் பலராமனையும் அழைத்துக்கொண்டு பாண்டீரவனம் என்னும் அடர்ந்த காடுகள் நிரம்பிய பகுதிக்குச் சென்றான்.

அங்கு ஒளிந்து விளையாடுவது, கண்ணாமூச்சி, விலங்குகள் பறவைகள் போல் சேட்டை செய்வது, தவளைபோல் எம்பிக் குதிப்பது, கல்லின் மேல் அமர்ந்து அரச தர்பார் விளையாட்டு ஆகியவற்றை விளையாடினான்.

ஆற்றங்கறையிலும், கொடி வீடுகளிலும், மலையடிவாரத்திலும் அருவிகளிலும் இஷ்டம்போல் விளையாடினர்.

கோபர்களுடன் கலந்து விளையாடி கண்ணனைச் சமயம் பார்த்துக் கடத்திச் சென்று கொன்றுவிடும் எண்ணத்துடன் வந்திருந்தான் பிரலம்பன் என்ற அசுரன்.

சிறுவனைப்போல் உருக்கொண்ட அவன் அவர்கள் அனைவருடனும் வந்துவிட்டான். ஏராளமான சிறுவர்கள் இருந்ததால் அவர்களுக்குப் புதியவனை அடையாளம் தெரியவில்லை. அவனும் கோபச் சிறுவன் என்றே நினைத்தனர்.

கண்ணனுக்குத் தெரியாதா என்ன? அவனுக்கு அத்தனை சிறுவர்கள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மாடுகளையும், அவற்றின் கன்றுகளையும் கூட அறிவான் அவன்.

பிரலம்பன் விளையாடும் சமயம், பல முறை கண்ணனைக் கொல்ல முயற்சித்தும், அவனால் கண்ணனின் அருகில் கூட செல்ல முடியவில்லை. எனவே பலராமனைக் கொல்ல முடிவெடுத்தான்.

கண்ணன் எல்லா சிறுவர்களையும்‌ அழைத்து இரு அணிகளாகப் பிரிந்து விளையாடத் திட்டமிட்டான். பலராமன் ஒரு அணிக்கும் கண்ணன் ஒரு அணிக்கும் தலைமையேற்றனர்.

தோற்றவர் ஜெயித்தவரைத் தூக்கிகோண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓட வேண்டும். அதுதான் நிபந்தனை.

பிரலம்பன் கண்ணனின் அணியில் சேர்ந்து கொண்டான். ஒரு விளையாட்டில் வேண்டுமென்றே பலராமனிடம் தோற்பதுபோல்‌ நடித்தான். கண்ணன் கண்ணைக் காட்ட, பலராமனும் புரிந்து கொண்டான்.

இப்போது பிரலம்பன் பலராமனைத் தூக்கிக்கொண்டு மலையடிவாரம் வரை  ஓடவேண்டும். பிரலம்பனும் பலராமனைத் தூக்கிக்கொண்டு ஓடத்துவங்கினான். சிறிது தூரம் சென்றதும் தன் சுய உருவம் பெற்றான். கோரமான பற்களும், சிவந்த கண்களும் உடல் நிறைய முடியும், தலையில் இரண்டு கொம்புகளுமாக மிகுந்த கோரமான உருவம் அவனுடையது. பலராமனைத் தோளில் தூக்கிக்கொண்டு வானில் பறக்கத் துவங்கினான்.

பலராமன் குறிப்பிட்ட உயரம் சென்றதும், தன்‌ முஷ்டியால் பிரலம்பனின் தலையில் ஓங்கிக் குத்தினான்.

கடப்பாறை தலையில் இறங்கியதுபோல் பிரலம்பனின் தலை பிளந்தது. அலறிக்கொண்டு உயரத்திலிருந்து கீழே விழுந்தான். அவன் உடல் மீதே விழுந்த பலராமனுக்கு அடிபடவில்லை. அத்தனை சிறுவர்களும் துள்ளிக் குதித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். பலராமனைத் தோளில் தாங்கினர். வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

மாலையாகிவிட கண்ணனும் பலராமனும் நிறைய வித்யாசமான பழங்களையும் பூக்களையும் சேகரித்துக் கொண்டு மாடுகளையும் சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு இடைச்சேரிக்குத் திரும்பினர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment